கோவில் காவலாளியைக் கொன்று விட்டு அம்மன் நகை கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கோவில் காவலாளியைக் கொலை செய்து விட்டு அம்மன் நகை, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுங்குவார் சத்திரம், திருமங்கலம் கண்டிகையில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு காவலாளியாக சுப்பிரமணி (40) என்பவர் வேலை பார்த்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. வீடும் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது.
தினசரி இரவு கோவிலுக்குள் படுத்துத் தூங்குவார். நேற்றும் இரவில் படுக்கப் போய் விட்டார். அப்போது நள்ளிரவில் திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
சுப்பிரமணி உள்ளே இருப்பதை அறியாமல் உண்டியலை உடைக்க ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு எழுந்த சுப்பிரமணி சத்தம் போட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருடர்கள், சுப்பிரமணியை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில், சுப்பிரமணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் உண்டியலில் இருந்த பணத்தையும், அம்மன் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகைகளையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இன்று காலை போலீஸாருக்குத் தகவல் போய் விரைந்து வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications