தமிழ்நாட்டை பிரிக்காவிட்டால் பெரும் உணவுப் பஞ்சம் வரும் - வன்னியர் சம்மேளனம்
சென்னை: தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகத்தில் பெரும் உணவுப் பற்றாக்குறை, பஞ்சம், பாதுகாப்பின்மை ஏற்படும் என்று வன்னியர் சம்மேளனம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் சிலர் கிளம்பியுள்ளனர். குறிப்பாக பாமக, வன்னியர் அமைப்புகளில் இதில் பெரும் ஆர்வமாக உள்ளனர். அதேபோல டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணிக் கழகமும் இதில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் வன்னியர் சம்மேளனம் என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சி.வி.ராமமூர்த்தி தலைமையில் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தைப் பிரிக்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம்.
அப்போது ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் வட பகுதி மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவற்றில் உணவு உற்பத்தி மிக மோசமான அளவில் குறைந்து போய் விட்டது.
அதி வேகமான முறையில் தொழில்மயமாக்கலும், நகர்ப்புறமயமாக்கலும் நடந்து வருவதே இதற்குக் காரணம்.
மேலும், தென் மாவட்டங்களிலிருந்து பெருமளவில் மக்கள் இடம் பெயர்ந்து வட பகுதிகளுக்கு குறிப்பாக சென்னைக்கு வருவதால், தென் மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிப் போயுள்ளன. மேலும், வட பகுதியில் அபரிமிதமான அளவில் மக்கள் குவிவதால் அங்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
மக்கள் இடப் பெயர்ச்சியால் சட்டசபைத் தொகுதி வரையறையின்போது தென் தமிழகம் நான்கு சட்டசபைத் தொகுதிகளையும், ஒரு லோக்சபா தொகுதியையும் இழந்தது.
வட பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தனர். இன்று விவசாயம் அடியோடு காணாமல் போயுள்ளதால் அவர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விவசாய நிலங்கள் இன்று குடியிருப்புகளாகவும், தொழில் கூடங்களாகவும் மாறி வருவதால் இருக்கவும் இடம் இல்லாத நிலைக்கு அப்பாவி விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
தென் தமிழகத்தில் உணவு உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. வட பகுதியிலோ நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் மட்டுமே சமச்சீரான நிலையை ஏற்படுத்தி, இரு பகுதிகளிலும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். மக்கள் இடப் பெயர்ச்சியும், அவலங்களும் தவிர்க்கப்படும் என்றார் ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications