விதர்பா தனி மாநிலம் கோரி நாக்பூரில் காங்கிரசார் போராட்டம்
நாக்பூர்: மஹாராஷ்டிராவி்ல் உள்ள விதர்பா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி நாக்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
நாக்பூர், அமராவதி உள்ளிட்ட விதர்பா பகுதியை மஹாராஷ்டிராவில் இருந்து பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது. இது மகாராஷ்டிரத்தின் மொத்த பரப்பளவில் 31 சதவீத பகுதியாகும். அம் மாநில மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் இங்கு வசிக்கின்றனர்.
1950களில் இந்தியாவின் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. பெரும்பாலும் இந்தி பேசும் மக்களைக் கொண்ட இந்தப் பகுதி அப்போதைய பிரதமர் நேருவால் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தனி விதர்பா மாநில விவகாரம் தனி தெலுங்கானா போராட்டம் துவங்கியதை அடுத்து மீண்டும் உயிர் பெற்றது.
கடந்த மாதத்தில் அவ்வப்போது ரயில் மறியல் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடந்துவந்தன.
இந்நிலையில் நேற்று நாக்பூரில் உள்ள சிதாபுல்டி பகுதியில் காங்கரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான விலாஸ் முட்டம்வர் தலைமையில் ஏராளமானோர் ஒன்றுகூடி இன்று நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விதர்பா தொழிலங்கள் சங்கம், விதர்பா பொருளாதார கவுன்சில் மற்றும் நாக்பூர் வர்த்தக சபை ஆகிய அமைப்புகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தன.
விதர்பா பகுதியை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டிய அவசியங்களை குறிப்பிட்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விரிவான கடிதம் எழுதியிருப்பதாக முட்டம்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications