அதிமுக ராமநாதபுரம் மா.செ. சத்தியமூர்த்தி ராஜினாமா

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இவர் தீவிர சசிகலா ஆதரவாளர் ஆவார். கடந்த அதிமுக அமைச்சரவையில் மிக முக்கிய துறையான வணிக வரித்துறையின் அமைச்சராக இருந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியி்ல் திமுக சார்பில் போட்டியிட்ட ரித்தீஷை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றார்.
இந் நிலையில் அவர் கட்சியை விட்டு விலகியுள்ளார். கட்சியில் உண்மையாகப் பாடுபடுவோருக்கு அதிமுகவில் மரியாதையே இல்லை என்றும், கட்சியில் விசுவாசத்திற்கும் வேஷத்துக்கும் இடையே போட்டி நடப்பதாகவும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எனக்கு பல பதவிகளை தந்து ஊக்கப்படுத்தினார். அவர் தந்த பொறுப்புக்கு நம்பிக்கையாக அவருக்கு பக்க பலமாக செயல்பட்டு வந்தேன். இதுவரை அவர் எனக்கு செய்த உதவிகளுக்கு தனிப்பட்ட முறையில் என்றென்றும் நன்றி கடன் பட்டு உள்ளேன்.
அதேபோல அரசியலில் கட்சி பணிக்கும், தேர்தலின் போதும் எனக்கு உறுதுணையாக இருந்த கழக தோழர்களுக்கும், தொண்டர்களுக்கும் தேர்தலின்போது வாக்களித்த பொது மக்களுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன்.
1980ம் ஆண்டில் இருந்து பல தேர்தலில் எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இன்றைய அரசியலில் உண்மைக்கும், உழைப்புக்கும் மரியாதை இல்லை. நேர் வழிக்கும், குறுக்கு வழிக்கும் பாகுபாடு இல்லை. விசுவாசத்திற்கும், நேசத்திற்கும் போட்டா போட்டி உள்ளது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடந்து வரும் நிலையில் ஆங்காங்கே கோஷ்டி மோதல்களும் அடிதடியும் நடந்து வருகின்றன.
இந் நிலையில் தான் கட்சியை விலகியுள்ளார் சத்தியமூர்த்தி. இவரும் விரைவில் திமுகவில் ஐக்கியமாவார் என்று தெரிகிறது.
ஜெயலலிதா வீடு அருகே ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் அதிமுக உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி அந்தக் கட்சியைச் சேர்ந்த பல்வேறு மாவட்டத்தினரும் தினமும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடு அருகே தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரபாக்கம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.பி.சுப்பிரமணியன், வடசென்னை பூங்காநகர் பகுதியை சேர்ந்த தமிழன்பன் ஆகியோர் தலைமையில் சுமார் 200 பேர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீடு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், மாவட்ட செயலாளர்கள் தான் இதற்கு எல்லாம் காரணம் என்றும் கூறி கோஷம் எழுப்பினர்.
அவர்களிடம் இருந்து மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர் ஜெயலலிதாவின் உதவியாளர்கள்.












Click it and Unblock the Notifications