தற்கொலைக்கு துணியும் சின்னஞ்சிறுசுகள்!
மதுரை: பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் 5ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகே நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, மங்கள்ரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் நாகஜோதி, வயது 10. இவர் அம்மாப்பட்டியில் உள்ள தன் மாமா வீட்டில் தங்கி 5ம் வகுப்பு படித்து வந்தார்.
அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு செல்ல ஆர்வமில்லாமல் இருந்த நாகஜோதியை வீட்டில் இருந்தவர்கள் பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்திவிட்டு ஆடுமேய்ப்பதற்காக சென்று விட்டனர்.
விரக்தியடைந்த நிலையில் நாகஜோதி, வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்துள்ளார். இனால் மயக்கமானார். அப்போது வீடு திரும்பிய அவரது மாமா நாகஜோதியை கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே நாகஜோதி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில்...:
இதேபோல், மும்பையில் கடந்த இரு தினங்களில் மூன்று சிறுவர்கள் சின்ன சின்ன காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மும்பை தானே தொம்பிவிலி பகுதியில் 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி நேகா சவந்த். இவர் டிவி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது நடனமாடுவது வழக்கம்.
டிவியில் சிறப்பாக ஆடவேண்டு்ம என்பதற்காகவே நடன பள்ளிக்கு சென்று நடனம் கற்று வந்தார். நடனத்தின் மீது ஆர்வம் அதிகமானதால், பள்ளிப் பாடத்தில் கவனம் சிதறியது.
இதை கவனித்த பெற்றோர், நேகாவை நடனப் பயிற்சிக்கு செல்ல வேண்டாம் என கண்டிப்புடன் கூறிவிட்டனர். இதனால் மாணவி மனம் உடைந்த நேகா, கடந்த சனிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சினிமாவின் தாக்கம்?
மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான 7ம் வகுப்பு மாணவன் சுஷாந்த் பாட்டீலும், 'மிட்டேர்ம்' தேர்வுகளில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்ததை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து இறந்துள்ளான்.
அதுவும் பள்ளியில் உள்ள கழிவறையில் நைலான் கயிற்றின் மூலம் தூக்கு போட்டு தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான்.
சம்பவத்துக்கு முந்தைய தினமான ஞாயிற்றுக் கிழமை பகலில் சுஷாந்த், '3 இடியட்ஸ்' படத்தை இரண்டு முறை தொடர்ந்து பார்த்ததாக கூறப்படுகிறது. அப்படத்தில் பொறியியல் மாணவன் ஒருவன் தனது விடுதி அறையில் தூக்குமாட்டி இறப்பதாக காட்சி வரும்.
சுஷாந்தின் விபரீத எண்ணத்துக்கு இந்த பட காட்சிகள் தான் ஆதாரமாக இருந்திருக்க வேண்டும் என உளவியலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications