மானாமதுரையில் ரூ. 1,600 கோடியில் வீடியோகான் டிவி தொழிற்சாலை
சென்னை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரூ. 1,600 கோடியில் வீடியோகான் நிறுவனம் டிவி தொழிற்சாலை தொடங்கவுள்ளது.
சட்டசபையி்ன் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் தொடங்கிய இக் கூட்டத்தில் அவரது உரையில் தமிழக அரசின் பல புதிய திட்டங்கள் இடம் பெற்றன.
அவரது உரை விவரம்:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரூ. 1,600 கோடியில் வீடியோகான் நிறுவனம் டிவி தொழிற்சாலை தொடங்கவுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனில் ரூ.80 கோடி அசல் முழுவதையும் அரசே வங்கிகளுக்கு திருப்பி செலுத்தும்.
புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் தான் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்ற விதிமுறை 3 ஆண்டாகக் குறைக்கப்படும். இதன்மூலம் 3 ஆண்டுகள் புறம்போக்கு நிலங்களில் குடியிருந்தாலே இலவச மனைப் பட்டா பெறலாம்.
இலங்கை தமிழர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளோடும், உரிய பாதுகாப்போடும் வசிக்கவும் இழந்த வாழ்வாதாரத்தை மீண்டும் பெறவும் இலங்கை தமிழர்களுக்கு மனம் நிறைவு அளிக்கும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வை விரைவில் காணவும் இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி ஆவண செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்தவித பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் வெகு காலமாக வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர வாழ்வுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.
விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தின் கீழ் மேலும் 40 லட்சம் கலர் டிவிக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும். சென்னையைப போல பிற மாவட்டங்களிலும் தொழில் முனைவோர் தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்தால் அரசு உரிய சலுகைகளை வழங்கும்.
வரும் நிதியாண்டில் 36 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும். திரைப்படத் தொழிலாளர்களுக்கு 90 ஏக்கரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.14,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன.இந்த வகையில் ரூ.1081 கோடி மதிப்பீட்டில் வெளிவட்ட சாலைகள் பணிகளும் தொடங்க உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications