எட்டிக்கனியாக கசக்கிறது கவர்னர் உரை: விஜயகாந்த்
சென்னை: தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரை ஆளுங்கட்சியினருக்கு காமதேனுவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கோ அது கசக்கும் எட்டிக்கனியாக உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்புக்கான எந்த திட்டமும் உரையில் இல்லை. உலகில் உள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். தமிழ்நாட்டில் நான்கில் ஒருவர் ஏழையாக உள்ளனர்.
அரசு தரப்பில் தரப்படும் இந்த புள்ளி விவரங்கள் கூட நம்பத் தகுந்தல்ல. உண்மையில் இதை விட கூடுதலான எண்ணிக்கையிலேயே ஏழைகள் உள்ளனர். ஆட்சியாளர்கள் தேர்தல்களில் வெற்றி பெற அக்கறை காட்டுகிறார்களே தவிர, வறுமை ஒழிப்பில் அக்கறை காட்டுவது இல்லை.
இலங்கை தமிழின படுகொலையை பற்றி கவர்னர் தனது உரையில் கன்டனமோ, குறைந்தபட்ச வருத்தமோ தெரிவிக்காதது பல அர்த்தங்களை கொண்டதாகும்.
மக்கள் பிரச்சனைகளுக்கு ஆளுநர் உரையில் எந்த தீர்வும் இல்லை. உணவு பொருட்களை கடத்துவதன் காரணமாக ரூ.1,200 கோடியாக இருந்த மானியம் இன்று ரூ.4 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது தான் இந்த ஆட்சியின் விசித்திரமான சாதனை.
மொத்தத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களோடு மேலும் சில திட்டங்களை சேர்த்து அவற்றின் தொகுப்புரையாக மட்டுமே கவர்னர் உரை உள்ளது.
ஆளுங்கட்சியிருக்கு கவர்னர் உரை காமதேனுவாக இருக்கலாம், ஆனால் நாட்டு மக்களுக்கோ அது ஒரு கசக்கும் எட்டிக்கனியாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications