குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு பிஇ-எம்எபிபிஎஸ் இலவச கல்வி
சென்னை:

சட்டசபையி்ன் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் தொடங்கிய இக் கூட்டத்தில் அவரது உரையில் தமிழக அரசின் பல புதிய திட்டங்கள் இடம் பெற்றன.
பர்னாலா உரை விவரம்:
முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த விஷயத்தில் தமிழகத்தின் நலன் காக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அணையின் உயரத்தை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் உரிமையை முழுமையாக நிலைநாட்டவும் தென் மாவட்ட விவசாயிகளின் நலனை காக்கவும் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இந்த அரசு அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை உறுதியுடன் தொடர்ந்து மேற்கொள்ளும்.
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இலவச கல்வி அளிக்கப்படும். இதற்கு வருமான மற்றும் ஜாதி சான்றிதழ்கள் ஏதும் தேவையில்லை. வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
தமிழக அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெரும் பலனடைந்துள்ளன. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 1,000ம் என்று இருப்பது ரூ. 1,050 ஆக உயர்த்தப்படும்.
சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1050ஆகவும், சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1100ஆகவும் கொள்முதல் விலை உயரும். இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ரூ.80 கோடியாகும்.
நகர்ப்புறங்களில் குடிசை பகுதிகளுக்கு மாற்றாக குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகளை கட்டித் தருவதைப்போல கிராமங்களில் ஏழை எளியோர் குடியிருந்து வரும் மண் சுவர்களால் ஆன கூரை வீடுகளை மாற்றி 'கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் மண்ணால் ஆன குடிசை வீடுகள் அனைத்தும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர வீடுகளாக கட்டப்பட்டு அவை இலவசமாக அளிக்கப்படும்.2010-11ம் ஆண்டு தொடங்கும் இந்த திட்டத்தின் கீழ் 21 லட்சம் கூரை வீடுகளுக்கு பதிலாக நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும். இந்த திட்டத்தின் முதல் ஆண்டான வரும் நிதியாண்டில் 3 லட்சம் நிரந்தர வீடுகள் ரூ.1800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த இயலாது என்று மத்திய அரசு இப்போது கருதினாலும் தமிழக அரசு மேற்கொண்ட காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை வழங்க வேண்டும்.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் முதற் கட்டமாக ரூ. 189 கோடி மதிப்பீட்டிலும், தாமிரபாணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான தாமிரபரணி- கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம் ரூ. 369 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய திட்டங்களுக்கு பாசன உதவித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
சேது சமுத்திரத் திட்டம் காலதாமதம் ஆவது தமிழக மக்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. தமிழர்களின் நீண்ட கனவான சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த, அதில் எழுந்துள்ள சிக்கல்களை களைந்து திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு போன்ற சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நியாயமான நிதிபங்கீடு அளிக்கப்பட வேண்டும், விவசாயிகள் தொழிலாளர்கள், மீனவர்கள் போன்ற சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழும் சாமான்ய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பான கொள்கை முடிவுகள் புதிய சட்டங்கள் குறித்து மாநில அரசுகளை கலந்து ஆலோசித்த பின்னரே மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் உரையாற்றிக் கெண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications