காஷ்மீர்: 22 மணி நேர சண்டை-3 தீவிரவாதிகள் சாவு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர், லால்சவுக் பகுதியில் கடும் தாக்குதலில் ஈடுபட்டிருந்த தீவிரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டனர். 22 மணி நேரமாக நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் 2 பேர், அவர்களுடைய பெயர்கள் குவாரி மற்றும் முஸ்தபா என தெரிய வந்துள்ளது, இன்று பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தோடு முற்றுகை முடிவுக்கு வந்தது.
குவாரி காஷ்மீரைச் சேர்ந்த தீவிரவாதி ஆவான். முஸ்தபா, ஒரு பாகிஸ்தானி. லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவன் என்று தெரிகிறது.
இதுகுறித்து காவல்துறை டிஜிபி குல்தீப் கூடா கூறுகையில், தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டது. நேற்று ஒருவனும், இன்று 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் தங்கியிருந்து தாக்குதல் நடத்திய ஹோட்டலுக்குள் வேறு யாரேனும் பதுங்கியுளளனரா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.
இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். ஒரு சி.ஆர்.பி.எப் அதிகாரி உள்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
தற்போது எல்லைப் பகுதி வழியாக ஊடுறுவ முடியாத நிலையில் தீவிரவாதிகள் உள்ளனர். எனவே மாநிலத்திற்குள் குறிப்பாக ஸ்ரீநகரில் இதுபோன்ற திடீர்த் தாக்குதல்களை அவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர் என்றார்.
இதற்கிடையே, தீவிரவாதிகள் ஆக்கிரமித்திருந்த பஞ்சாபி ஹோட்டல் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகிறது. அங்கு பல பகுதிகளில் தீவிரவாதிகள் வைத்த தீயாலும், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலாலும் தீ எரிந்து வருகிறது. அவற்றை தீயணைப்புப் படையினர் அணைத்து வருகின்றனர்.
லால் சவுக் பகுதியில் உள்ள பிளாடியம் சவுக் என்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மற்றும் போலீஸார் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய அவர்கள், துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர்.
பாதுகாப்புப் படையினர் பெருமளவில் திரண்டு வந்து அதிரடித் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியதும், அருகில் இருந்த பஞ்சாபி ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டு தாக்கத் தொடங்கினர் தீவிரவாதிகள்.
கிட்டத்தட்ட 22 மணி நேரமாக நடந்து வந்த இந்தத் தாக்குதல் இன்று பிற்பகலில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து லால்சவுக் பகுதியி்ல் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications