தென் மாவட்டங்களில் பரவும் மர்மக்காய்ச்சல் - நெல்லை விரைகிறார் அமைச்சர்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சிக்குன்குனியா மற்றும் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று நெல்லை விரைகிறார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இத்துடன் சிக்குன்குனியா நோயும் பரவுவதாக கூறப்படுகிறது. இனம்புரியாத காய்ச்சல்களால் ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மர்மக் காய்ச்சல் வந்தால் கை, கால் மற்றும் மூட்டுகளில் ஆணி அடித்ததைப்போல் வலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 6 நாட்களுக்கு 100 டிகிரிக்கும் குறையாத காய்ச்சல் ஏற்படுகிறது. 6 வாரத்திற்கு மூட்டுகளில் வலியும், வறட்டு இருமலும் இருந்து வருகிறது.
இந்த வைரஸ் காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் குழந்தைகளை அதிக அளவில் தாக்குகிறது.
குறிப்பாக விருதுநகர், நெல்லை மேலப்பாளையம், கடையநல்லூர் போன்ற பகுதிகளில் சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவோர், இந்த காய்ச்சல் தொற்றோடு வந்ததாகவும், இதனால் இப்பகுதிகளில் இக்காய்ச்சல் பரவுவதாகவும் தெரிகிறது.
அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடாமல் அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொது சுகாதார துறை இயக்குனர் இளங்கோ நெல்லை வந்து ஆய்வு நடத்தினார்.
எனினும் மர்ம காய்ச்சல் நீடிப்பதால் சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் இன்று நெல்லை வருகிறார்.
நெல்லை கலெக்டர் அலுவகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அவருடன் சுகாதார துறை முதன்மை செயலாளர் சுப்புராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி முதன்மை செயலாளர் ராஜ்குமார், கலெக்டர் ஜெயராமன், சுகாதார துறை இணை இயக்குனர் உஷா ரிஷிபதாஸ் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
ஸ்டாலின் ஆலோசனை:
முன்னதாக தென்மாவட்டங்களில் பரவலாக காணப்படும் காய்ச்சல் பற்றியும், நோய்களுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணியினை தீவிரப்படுத்துவது குறித்தும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், 'மலேரியா, டெங்கு, லெப்டோஸ்பைரோசிஸ், ஸ்வைன்ப்ளூ, யானைக்கால் நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும்; அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
அசைவம் கூடாது- மருத்துவர்கள் அறிவுரை
கருவாடு சாப்பிடுவதால் மர்ம வைரஸ் காய்ச்சல் குணமாகும் என நெல்லையில் வதந்தி கிளம்பியது.
ஆனால் கறி, மீ்ன், கருவாடு மற்றும் அசைவ உணவை சாப்பிட்டால் கை, கால், மூட்டு வீக்கம் அதிகரித்து வலி மேலும் அதிகமாகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'கருவாடு சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும் வாய்ப்பு இல்லை. மாறாக அசைவம் சாப்பிட்டால் ரத்தத்தில் யூரிக் ஆசிட் விகிதம் அதிகரிக்கும்.
இதனால் கை, கால், மூட்டுகளில் வலி மேலும் அதிகரிக்கும். நாட்டு காய்கறிகளில் சமைக்கப்படும் சைவ உணவே சிறந்தது' என்றனர்.












Click it and Unblock the Notifications