வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ

ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் வெற்றிவேல். இவர் இன்று ஆம்பூரில் கடும் தாக்குதலுக்கு ஆளானார்.
அவரை ஒரு கும்பல் மறித்து, சரமாரியாக வெடிகுண்டுகளை வீசித் தாக்கி நிலை குலைய வைத்தது. பின்னர் அரிவாள்களால் சரமாரியாக வெட்டப்பட்டார் வெற்றிவேல்.
இதில் அவரது வலது கால் துண்டானது. படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெற்றிவேல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நெல்லை காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சென்ற பாதையில் நடந்த கொடூரம்...
இந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் அந்தப் பாதை வழியாக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அமைச்சர் மைதீன்கான், அதிகாரிகள் உள்ளிட்டோர் சிக்குன்குனியா தொடர்பான ஆலோசனைக்காக கார்களில் சென்றிருந்தனர்.
அவர்கள் சென்ற சில நிமிடங்களில் இந்தப் படுகொலை நடந்திருப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
போலீஸார் குவிக்கப்பட்டிருந்த ஒரு இடத்தில், மிக மிக பலத்த பாதுகாப்புடன் கூடிய ஒரு இடத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை தொடர்பாக இருவரைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
நிலத்தகராறு காரணமாக கொலை:
2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே நிலத் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு எஸ்.ஐ. வெற்றிவேலிடம் வந்தது.
அதை விசாரித்த அவர் ஒரு தரப்பின் வாதங்கள் மற்றும் ஆதாரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருந்ததால் அவர்கள் தரப்புக்கு பஞ்சாயத்துப் பேசி முடித்துக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மறு தரப்பு கோபமடைந்தது. இந்த நிலையில்தான் இன்று மோட்டார் சைக்கிளில் எஸ்.ஐ. வெற்றிவேல் வந்து கொண்டிருந்தபோது திடீரென வழிமறித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
கொல்லப்பட்ட எஸ்.ஐ. வெற்றிவேலுக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள உப்புக்குடி கிராமம்தான் சொந்த ஊராகும். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications