தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடி ராஜ்ஜியம்-பீதியில் மக்கள்
சென்னை: தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ரவுடிகளின் அட்டகாசம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடுவீதியில் பகல் நேரத்திலேயே ரவுடிக்கும்பல் நடத்திய கொலை சம்பவங்கள் கடந்த 10 நாட்களில் மட்டும் 6க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்துள்ளன.
வாய்க்கால் வரப்பு சண்டை, சொத்துத்தகராறு போன்றவற்றில் நடக்கும் படுகொலைகள் தவிர்க்கமுடியாதது எனக் கருத வாய்ப்புண்டு. ஆனால், நடுரோட்டில் பட்டப்பகலில் ரவுடிகள் களமிறங்கி, கொலைக் குற்றங்களில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதன் உச்சக்கட்டமாக நேற்று நெல்லை அருகே போலீஸ் எஸ்.ஐ ஒருவரே கொடூரமாக ரவுடிகளால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ரவுடிக்கும்பல் திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களை கொண்டு போலீஸ் அதிகாரியை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றுள்ளனர்.
ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை என்றால், சராசரி மனிதனின் பாதுகாப்புக்கு அங்கே என்ன உத்தரவாதம் இருக்கிறது என சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்கள் முணுமுணுத்தனர்.
கொலை சம்பவ இடத்தை சுடச்சுட மாநில அமைச்சர்களே பார்வையிட்டுள்ளனர். எந்த பின்னணியில், யாருடைய ஆதரவுடன் இத்தனை துணிச்சலாக பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளிலேயே களமிறங்கி படுகொலைகளை செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பலமான போலீஸ் படையையும், உளவு மற்றும் புலனாய்வுத் துறைகளையும் நிர்வகித்து வரும் தமிழக அரசுக்கு இந்த சமூகவிரோத கும்பலின் பின்னணியை கண்டறிந்து ரவுடியிசத்தை வேரறுக்க ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி சாதாரண பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
நேற்றைய தினம் போலீஸ் எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டதற்கு சற்று முன்பு புதன்கிழமை நாகர்கோவிலில் பெருவிளை மோகன் என்ற பிரபல ரவுடி இதே போல் நடுரோட்டில் கூட்டாளிகளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டான்.
கடந்த 1996ம் ஆண்டு நாகர்கோவில் சிறையில் புகுந்து ரவுடி லிங்கத்தை வெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவன் பெருவிளை மோகன். நடுவீதியில் ஏதோ சினிமா ஷூட்டிங் நடத்துவது போல சாதாரணமாக 'போட்டுத்தள்ளிவிட்டு' நழுவியது மற்றொரு ரவுடி கும்பல்.
இந்த சம்பவத்துக்கு இரண்டு நாள் முன்பும் இதே போலவே சென்னை தரமணி அருகே 11 பேர் கொண்ட ரவுடிக்கும்பல், ஜெயபதி என்ற தங்களின் விரோதியை நடுரோட்டில் சுற்றி வளைத்து சராமரியாக வெட்டி சாய்த்தனர்.
அதே போல் கடந்த 28ம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூச்சிவிளாகத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமாரை ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்த போது, ரவுடிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.
ஜெயக்குமார் உடலில் 35 இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து துடிதுடித்து இறந்தார். பல்வேறு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய ஜெயக்குமார் போலீஸ் தேர்வு கூட எழுதியிருக்கிறார்.
இதேபோல் டிசம்பர் 21ம் தேதி தண்டையார்பேட்டையில் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்த முருகன் என்ற ரவுடியை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓடஓட விரட்டி வெட்டியது.
ரத்தவெள்ளத்தில் முருகன் சாய்ந்ததும், ஆட்டோவில் கும்பல் தப்பியது. இதுவும் ரவுடிகளின் முன்விரோதத்தால் நடந்த கொலை என கூறப்பட்டது.
இதற்கிடையே, மதுரையில் பிரபல ரவுடியை கொன்று, அவரது வீட்டுக்கு அருகே பிணத்தை புதைத்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக ரவுடிகளின் படுகொலை காட்சிகள் தமிழகத்தில் பரவலாக அரங்கேறி வருகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் 6க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளன. சென்னையில் மட்டும் 350 புதிய ரவுடிகள் இந்த ஆண்டு களத்தில் இறங்கியருப்பதாக பேட்டி வேறு கொடுத்திருந்தார்கள் போலீசார்.
ரவுடிகள் தங்களுக்குள் அடித்து சாகட்டுமே என போலீஸ் 'சிறப்பு வியூகம்' அமைத்து வேடிக்கை பார்க்கிறதா அல்லது ரவுடிகள் உண்மையில் சுதந்திரமாக தங்களின் தாதா ராஜ்ஜியத்தை நடத்துகிறார்களா என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.












Click it and Unblock the Notifications