இலங்கை தேர்தலால் தமிழருக்கு பயனில்லை: சீமான்
கன்னியாகுமரி: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே வென்றாலும், சரத்ஃபொன்சேகா புதிய அதிபரானாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறினார்.
கன்னியாகுமரி அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தில் நடைபெற உள்ள சினிமா படப்பிடிப்புக்காக இயக்குனர் சீமான் கன்னியாக்குமரி வந்தார்.
அப்போது நிருபர்களை சந்தித்த அவர்,
'இலங்கையில் போர் நின்ற பின்னரும் தமிழர்களின் பிரச்னை தீர்ந்தபாடில்லை. 3 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி தமிழர்கள் பலர் அகதி முகாம்களில் முடங்கி கிடக்கிறார்கள்.
அவர்களை விடுவித்து விட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் முழுமையாக விடுதலையாகவில்லை. தமிழர்களுக்கு இலங்கையில் சுதந்திரம் இல்லை.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மற்றும் சரத் ஃபொன்சேகா போட்டியிடுகின்றனர். இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யபட்டபோது அதை உலக நாடுகள் கண்டித்தன. ஆனால் இந்தியா மட்டும் கண்டுகொள்ளவில்லை.
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும். இது குறித்து தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
நாம் தமிழர் இயக்கம் வரும் மே 14ம் தேதி அரசியல் கட்சியாக உதயம் ஆகிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவோம். யாருடனும் கூட்டணி வைக்கமாட்டோம். ஆனால், கூட்டணிக்காக வருபவர்களை ஏற்று கொள்வோம்.
நாம் தமிழர் இயக்கத்தின் முதல் போராட்டம் தேனியில் அடுத்த மாதம் நடக்கிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். முல்லை பெரியார் அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும்' என்றார்.












Click it and Unblock the Notifications