முடிவெட்டும் படிப்புக்கு ஆஸி. போகணுமா?-கிருஷ்ணா
டெல்லி: தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்விக்காக வெளிநாடு போய் படித்தால் பரவாயில்லை. ஹேர் ஸ்டைல் மற்றும் ஃபேஷியல் போன்ற படிப்புக்கெல்லாம் எதற்காக இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்படுவது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் இந்தியா தனது கண்டனத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் வர்கீஸை சந்தித்துவிட்டு வெளியே வந்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,
ஐஐடி படித்த பின்போ அல்லது பல்கலைக்கழக அளவிலோ அல்லது இந்தியாவில் கிடைக்காத உயர்கல்விக்காகவோ மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு போனால் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், நான் அங்கு சென்றபோது பார்த்திருக்கிறேன். முடி அழகுபடுத்துவது, ஃபேஷியல் கோர்ஸ் போன்ற பயிற்சிகளுக்கெல்லாம் மாணவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள்.
இந்த படிப்புக்கெல்லாம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போகவேண்டிய அவசியமே இல்லை. டெல்லி. மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் இவற்றுக்கு பிரத்தியே பயிற்சிகள் அளிக்கும் நிலையங்கள் உள்ளன.
வெளிநாடுகளுக்கு பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோர் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். எனினும் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல எல்லா இந்தியருக்கும் பாதுகாப்பு அவசியம் என்பதை அரசு உணர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றார்.
அமைச்சர் சொல்வதும் வாஸ்தவம் தான் என ஆஸ்திரேலிய இந்தியர்கள் பலர் கூறுகின்றனர். 'ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெறவேண்டும், யாருக்கு கேட்டிராத வகையில் புதிய படிப்புகளை படிக்க வேண்டும் என ஆசையால் பலர் ஆஸ்திரேலியாவுக்கு வருவதுண்டு.
மேலும் ஏஜென்டுகளால் உசுப்பேற்றப்படும் பலர் முறையான தங்கும் வசதி, சாப்பாடு, வருமானத்துக்கான வழி போன்றவை இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வந்து விடுகின்றனர்.
இதன்காரணமாக படிப்பு மற்றும் உணவு, உறைவிடத்துக்காக முறையற்ற வேலைகளில் சேருகின்றனர். இப்படிப்பட்ட வேலைகளில் சம்பளம் ரொக்கமாகத் தான் கிடைக்கும். இந்த கரன்சி நோட்டுகளை எடுத்துக்கொண்டு இரவு நேரங்களில் இவர்கள் வரும்போது தான் பெரும்பாலும் வழிப்பறி தாக்குதல்கள் நடக்கும் என கூறப்படுகிறது.
டெல்லி பத்திரிகைக்கு ஆஸி கண்டனம்:
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா போலீசாரை நிறவெறியர்களாக சித்தரித்து கார்ட்டூன் வெளிட்ட டெல்லி பத்திரிகைக்கு ஆஸ்திரேலிய துணை பிரதமர் ஜூலியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நிறவெறி அமைப்பாகக் கூறப்படும் 'குகுலக்ஸ் கிளான்' போராளிகளை விக்டோரியா போலீஸ் தொப்பியுடன் சித்தரித்து டெல்லி பத்திரிகை ஒன்று கேலிச் சித்திரம் வெளியிட்டது.
ஆஸ்திரேலியாவில் இந்தியருக்கு எதிரான இனவெறி தாக்குதலை கண்டிக்கும் வகையில் இந்த கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications