சாமியார் மிரட்டலால் பெண் தற்கொலை-குவியும் புகார்கள்

இதுதவிர உ.பியைச் சேர்ந்த தியாகி என்பவரிடம் ரூ. 1 கோடி பணத்தை மோசடி செய்து விட்டார் சாமியார் என்ற இன்னொரு பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது.
நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவரிடம் உதவியாளராக, தேனாம்பேட்டை கிரியப்பா ரோட்டைச் சேர்ந்த ஹேமலதா பணியாற்றி வந்தார்.
தன்னை சாமியார் கற்பழித்து விட்டதாக ஹேமலதா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போலீஸ் விசாரணையின்போது தன்னை சாமியார் 50 முறை கற்பழித்ததாக ஹேமலதா கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் கேட்க சாமியாருக்கு போலீஸார் அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் வராமல் டபாய்த்து வந்தார்.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சாமியாரை பெங்களூரில் வைத்து போலீஸார் கைது செய்து கூட்டி வந்தனர்.
பின்னர் சாமியாரின் சென்னை வீட்டில் சோதனை நடத்தியபோது, புலித் தோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக புலித் தோல் வைத்திருந்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட்டுக்கு செல்லும் வழியில் நெஞ்சு வலிப்பதாக சாமியார் கூறியதால் அவரை மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர்.
தானமாக கொடுத்த வீட்டை சுட்டார்...
இந்த நிலையில் சாமியாரின் மிரட்டலால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் வெளியில் வந்துள்ளது.
ஆன்மீக சுற்றுப்பயணம் என்று உலகில் பல நாடுகளுக்கு சென்றுள்ளார் ஸ்ரீகுமார். இதற்கு பலர் உதவி செய்துள்ளனர். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது விமலா ராஜ் என்ற பெண் சந்தித்துள்ளார். அவருக்கு சொந்தமான வீடு மந்தைவெளியில் இருக்கிறது.
அந்த வீட்டை டிரஸ்ட் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளும்படி விமலாராஜ் பெருந்தன்மையுடன் கூறி உள்ளார்.
ஆனால் பலே சாமியாரோ, அந்த வீட்டின் மேல் இன்னொரு வீட்டைக் கட்டி மொத்தமாக அப்படியே அபேஸ் செய்து விட திட்டமிட்டு வேலையில் இறங்கினார். போலியான பவர் பத்திரமும் தயார் செய்து இருக்கிறார்.
இது விமலா ராஜுக்குத் தெரிய வந்து, அவரது உறவினர் கென்னடி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். அது இன்னும் நிலுவையில் உள்ளது.
பொய் பேசி வசவு வாங்கினார்...
மற்றொரு சொத்து வழக்கில் ஆஜரான சாமியார் அவரது அண்ணன் இறந்து விட்டதாக பொய் தகவல் சொல்லி நீதிபதியிடம் திட்டு வாங்கியுள்ளார். இந்த வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளதாம்.
இதேபோல, மத்திய கைலாஷ் பகுதியில் ஒரு வீட்டில் சாமியார் குடியிருந்தார். அப்போது வீட்டின் முன் பக்கத்தை இடித்து இன்டீரியர் டெக்கரேஷன் செய்துள்ளார்.
அதை பார்த்ததும் விட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி கூறினார். ஆனால் சாமியார் வீட்டை காலி செய்ய மறுத்து உரிமையாளரை மிரட்டி இருக்கிறார். இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
கேரளப் பெண் லூசி சிங்கப்பூரில் தற்கொலை..
சாமியார் ஸ்ரீகுமார் சிங்கப்பூரில் குடும்பத்துடன் இருந்தபோது கேரளாவை சேர்ந்த லூசி என்ற பெண் உதவியாளராக இருந்துள்ளார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு லூசி கேரளா சென்றுவிட்டார்.
ஆனால், அவரை மீண்டும் வேலைக்கு வரும்படி சாமியார் கட்டாயப்படுத்தி இருக்கிறார். வர மறுத்தால் உனது ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்றும் மிரட்டினாராம்.
இதனால் பயந்துபோன லூசி தற்கொலை செய்து கொண்டார். இதற்காக சாமியாரை 24 நாட்கள் சிங்கப்பூர் போலீசார் வீட்டு காவலில் வைத்திருந்தனராம். பின்னர்தான் அவரை விட்டுள்ளனர்.
லூசி போன பின்னர் செம்மஞ்சேரியைச் சேர்ந்த பாக்கியவதி என்ற பெண்ணை சிங்கப்பூருக்கு வரவழைத்து வேலைக்குச் சேர்த்துள்ளார். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
டெல்லியில் ரூ. 1 கோடி ஸ்வாஹா...
இதேபோல உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் தியாகி என்பவரிடம் ஸ்ரீகுமார் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் காஸியாபாத் இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பங்கஜ் தியாகி. இவரை அணுகிய ஈஸ்வர ஸ்ரீகுமார், தனக்குச் சொந்தமான, டெல்லி சப்தர்ஜங் என்கிளேவின் 2வது தளத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டை வாங்குவதற்கு முதல் கட்டமாக ரூ.1 கோடி தருவதாக பங்கஜ் தியாகி ஒப்புக் கொண்டாராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஒரு வார காலத்திற்குள், வீட்டின் நிலப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துவித சான்றுகளையும் ஒப்படைப்பதாக சாமியார் உறுதி அளித்துள்ளார்.
ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீகுமார், வீட்டுப் பத்திரத்தைக் கொடுக்க காலம் தாழ்த்தி வந்தாராம்.
ஆனால், இந்த ஒரே வீட்டை பல பேரிடம் சாமியார் காண்பித்து பணத்தைப் பெற்றிருப்பதும், மேலும் அந்த வீட்டை எச்டிஎப்சி வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றிருப்பதும் பங்கஜ் தியாகிக்குத் தெரியவந்தது.
இதையடுத்து தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டார் தியாகி. சாமியாரும் கொடுப்பதாக ஒத்துக் கொண்டு, 08.01.2008 தேதியிட்ட காசோலையை தொழிலதிபர் பங்கஜ் தியாகியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதையடுத்து, நொய்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பங்கஜ் தியாகி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஹேமலதாவைக் கற்பழித்ததாக கூறப்படும் வழக்கு, புலித் தோல் வழக்கு தவிர தற்போது உ.பியில் பண மோசடியில் ஈடுபட்டதாக புதிய புகாரும் எழுந்துள்ளதால், சாமியார் குறித்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்ற போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
மருத்துவ சோதனை..
இதற்கிடையே, சாமியார் ஸ்ரீகுமாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
கற்பழிப்பு புகார்களுக்கு ஆளானவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவது இயல்பு. ஆண்களுக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்தப்படும்.
அந்த அடிப்படையில், சாமியார் ஸ்ரீகுமாருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதி கோரி சென்னை சைதாப்பேட்டை 17-வது கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அனுமதி கிடைத்தவுடன் சாமியாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
இதற்கிடையே, சாமியார் மீதான கற்பழிப்பு புகார் தொடரை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications