கூட்டணிக்குத் தயார்: விஜய்காந்த் அறிவிப்பு- கடவுளும் மக்களும் 'கைவிட்டதால்' இந்த முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vijayakanth
கடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று இதுவரை ஓவராக வசனம் பேசி வந்த விஜய்காந்த், இப்போது கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்துள்ளார்.

இன்று நடந்த தேமுதிக பொதுக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும், பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

''தமிழ்நாட்டில் ஜனநாயத்தை காப்பாற்ற மீண்டும் தர்ம யுத்தத்துக்கும், தியாகத்துக்கும் தேமுதிக தயாராக உள்ளது. ஜனநாயக மீட்பு போராட்டத்தில் உண்மையில் அக்கறை கொண்ட அரசியல் இயக்கங்கள் தேமுதிகவோடு இணைந்து செயல்பட முன் வருவார்கள் எனில் அதுபற்றி முடிவு எடுக்கவும் பேசவும் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது'' என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் ஓரளவுக்கு நல்ல ஓட்டு வாங்கியும் சமீபத்திய சட்டமன்ற இடைத் தேர்தல்களில் டெபாசிட்டே பறிபோய் விட்டதால் அதிர்ச்சியடைந்த விஜய்காந்த், இன்று அக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை திடீரென்று கூட்டினார்.

அதிமுக போட்டியிடாத இடைத் தேர்தல்கள் தவிர இடைத் தேர்தல்களில் எல்லாமே தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட இப்போது அந்தக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.

இதையடுத்து இனி கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்றும், கூட்டணி இல்லாமல் இனி டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் கட்சியினர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறாக கட்சியினர் மத்தியில் சலிப்பும், கட்சியை விட்டு தொண்டர்கள் வெளியேறுவதும் அதிகரித்துவிட்ட நிலையில், கட்சியின் பொதுக் குழுவை விஜயகாந்த் இன்று கூட்டினார்.

பொதுச் செயலாளரும் அவரே..

இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானத்தின்படி, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. அந்தப் பொறுப்பை கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூடுதலாக வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ராமு வசந்தன் மரணமடைந்த பிறகு அந்தப் பதவி காலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

புது சட்டசபை வளாகம் போல் அரங்கம்:

இன்றைய பொதுக் குழு கூட்டத்துக்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடந்தது. இங்கு தான் அதிமுக செயற்குழு-பொதுக் குழுக் கூட்டங்களும் நடப்பது வழக்கம்.

இன்றைய பொதுக் குழுவுக்காக அமைக்கப்பட்ட அரங்கம், புதிதாகக் கட்டப்பட்டு சட்டசபை வளாகம் போல் வ‌டிவமைக்கப்பட்டிருந்தது.

அதாவது விரைவில் புதிய சட்டசபை வளாகத்தி்ல் நமது ஆட்சியே நடக்கப் போகிறது என்ற நம்பி்க்கையை ஊட்டும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டதாம்.

செயற் குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்க, விஜயகாந்தி்ன் மனைவி பிரேமலதா, மச்சானும் மாநில இளைஞரணி செயலாளருமான சுதீஷ் உள்ளி்ட்ட 250 பேர் செயற்குழு, 2,700 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட்டணி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 23வது தீர்மானமே கூட்டத்தின் ஹை-லைட்டாகும்.

மற்ற முக்கிய தீர்மானங்கள்:

-தேர்தல்களில் பணத்தை வாரி இறைப்பதால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்கவும், ஆரோக்கியமான அரசியல் மீண்டும் தலை எடுக்கவும் அனைத்து தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்போம்.

-தமிழ்நாட்டை எக்காரணத்தை கொண்டும் பிரிக்க வேண்டும் என்று யார் குரல் எழுப்பினாலும் தேமுதிக முழு மூச்சுடன் எதிர்க்கும்.

-இலங்கை தமிழ் மக்கள் சிந்திய ரத்தமும் வடித்த கண்ணீரும் தமிழின விரோதிகளையும், துரோகிகளையும் அழிக்காமல் விடாது. இந்த போராட்டத்தை முறியடித்ததால் தமிழீழ கோரிக்கை இல்லாமல் போய்விடாது. தமிழ் ஈழ மக்கள் செய்துள்ள தியாகம் அளவு கடந்தது. அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு பொதுக்குழு ஆதரவை தெரிவிக்கிறது.

-இந்தியாவில் இந்தி மொழிக்கு தரப்படுவது போல் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

-கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

- மலேசியா, வளைகுடா நாடுகளில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்களின் குறைகளைக் களைய தூதர்களாக தமிழர்களையே நியமிக்க வேண்டும் ஆகியவை.

ஒதுங்கிய ரியல் எஸ்டேட் புள்ளிகள்:

தேமுதிகவை விஜய்காந்த் தொடங்கியபோது அதில் முக்கிய பதவிகளை பிடித்தவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏராளமாக பணம் பார்த்தவர்கள் தான். இதனால் முதல் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக பணத்தையும் செலவிவிட்டனர்.

ஆனால், பொருளாதார தேக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் படுத்துவிடவே கட்சியில் அவர்கள் அனைவருமே சைலண்ட் ஆகிவிட்டனர். இதனால் தான் இடைத் தேர்தல்களில் தேமுதிகவால் செலவும் செய்ய முடியவில்லை. பிரச்சாரமும் களை கட்டவில்லை.

மேலும் என்ன தான் செலவும் பிரச்சாரம் செய்தாலும் கூட்டணி இல்லாமல் தோல்வி உறுதி என்பதால் கட்சியினர் ஆர்வமாக செய்ல்படவும் இல்லை.

இந் நிலையில் தான் கூட்டணிக்குத் தயார் என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் விஜய்காந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+