ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் தீ வைத்து எரிப்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் கடும் தாக்குதல்களில் இதுவரை 2 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய வம்சவாளி இளைஞர் ஒருவர் தீவைத்துக் கொளுத்தப்பட்டார். கடும் தீக்காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த இளைஞருக்கு வயது 29. அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு மெல்போர்ன் நகரின் எஸ்ஸன்டன் என்ற பகுதியில் அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கி தீவைத்தது.
எஸ்ஸன்டன் பகுதியில் நடந்த டின்னர் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் அவர் கலந்து கொள்ள வந்தார். டின்னரை முடித்து விட்டு கிரிஸ் கிரசன்ட் பகுதியில் உள்ள தங்களது வீட்டுக்குத் திரும்பினர்.
மனைவியை இறக்கி விட்டு விட்டு காரை பார்க் செய்ய அந்த இந்திய இளைஞர் முயன்றபோது திடீரென ஒரு கும்பல் வந்து தாக்கியுள்ளது. பின்னர் அவருக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் அந்த இளைஞரின் தோள்பட்டை, மார்பு, முகம் ஆகியவை கருகிப் போய் விட்டது. துடிதுடித்த அவரை மனைவியும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு ஆல்பிரட் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.
அவருக்கு 20 சதவீத அளவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய சம்பவத்தால் இந்தியர்களிடையே மேலும் பீதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications