அமர் சிங்குக்கு ஆதரவாக 25 சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

மொராதாபாத் எம்.எல்.ஏவான சந்தீப் அகர்வால் கூறுகையில், அமர்சிங்கின் ராஜிநாமாவை முலாயம் சிங் யாதவ் ஏற்கக் கூடாது. அதை நிராகரிக்க வேண்டும். மேலும், தனது பழைய பொறுப்புகளில் அமர்சிங் தொடர வேண்டும் என கூற வேண்டும்.
இல்லாவிட்டால், நானும், 25 எம்.எல்.ஏக்களும் விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.
கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் (முலாயமின் தம்பி) செயல்பட்டு வருகிறார். அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்.
கட்சிக்காக அமர்சிங் நிறைய செய்துள்ளார். இந்த நிலையில் ராம் கோபால் யாதவ், அமர்சிங்குக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார் அகர்வால்.
இளைஞர் அணி பொ.செ. விலகல்
இந்த நிலையில், அமர்சிங்குக்கு ஆதரவாக சமாஜ்வாடிக் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் பிரிஜேஷ் சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமர்சிங்கின் ராஜினாமாவை ஏற்கவில்லை- முலாயம்சிங்
அமர்சிங்குக்கும் ஆதரவாக சிலர் களம் இறங்கியிருப்பதை உணர்ந்துள்ள கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நிதானப் போக்கை கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்வோம். அமர்சிங்கின் ராஜினாமாவை ஏற்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் சிகிச்சை பெற்றுவரும் மார்க்சிஸ்ட் முதுபெரும் தலைவர் ஜோதிபாசுவை பார்ப்பதற்காக வந்திருந்த முலாயம் அமர்சிங் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'அமர்சிங்கின் ராஜினாமாவை ஏற்க முடியாது. பிரச்னைகள் குறித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். எங்களின் அரசியல் உறவு அவ்வளவு சாதாரணமானது அல்ல.
சஞ்சய் தத்தின் ராஜினாமாவைக் கூட நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாவற்றையும் நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். விரைவில் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு வரும்' என்றார்












Click it and Unblock the Notifications