'தொகுதியில் புகைப் பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள்' - எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள்
சென்னை: தொகுதி மக்களிடையே புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த எம்.எல்.ஏ.க்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, புகையிலை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக, உலக சுகாதார நிறுவனமும், தமிழ்நாடு தன்னார்வ நலக்குழுமமும் இணைந்து இகை நடத்தின.
சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் 234 எம்.எல்.ஏக்கள் மொத்தம் உள்ளனர். ஆனால் இந்த கருத்தரங்கில் 2 பெண்கள் உள்பட மொத்தமே 16 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் பேசுகையில்,
'புகையிலைக்கு எதிரான சட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் புகைபிடித்த 15,600 பேரிடம் ரூ.17.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் இச்சட்டத்தை தொகுதி மக்களுக்கு கொண்டு சென்று, புகை பழக்கத்தை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். புகையிலை ஏற்படுத்தும் பாதிப்புகளை மக்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லவேண்டும்' என்றார்.
எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், எஸ்.லட்சுமணன் ஆகியோர் பேசினர். சட்டசபை செயலாளர் செல்வராஜ், பொதுசுகாதாரத் துறை இயக்குனர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.












Click it and Unblock the Notifications