கருணாநிதி, ஸ்டாலின் தனிக் கட்சி ஆரம்பிக்கட்டும், வலி தெரியும் - விஜயகாந்த்
சென்னை: நான் தனியாக கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ஆனால் அண்ணா ஆரம்பித்த கட்சியைத் தான் கருணாநிதி நடத்திக் கொண்டு இருக்கிறார். அந்த கட்சியில்தான் ஸ்டாலின் இருந்து கொண்டு என்னை விமர்சிக்கிறார். நீங்கள் தனியாக கட்சி ஆரம்பியுங்கள். உங்களுக்கு அதன் வலி தெரியும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணி அமைக்க தீர்மானித்து அதுதொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரத்தையும் விஜயகாந்த்துக்கு அளித்து தீர்மானம் போட்டனர்.
அதன் பின்னர் விஜயகாந்த் பேசுகையில்,
தேமுதிக துவண்டுவிட்டது என்று சிலர் கூறுகிறார்கள். தேமுதிக துவளவில்லை. நன்றாகத்தான் இருக்கிறது. எங்களின் பலமே தொண்டர்கள்தான்.
முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சொல்லி விஜயகாந்த் பெயர் வாங்குகிறார் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். கருணாநிதியின் பெயரைச் சொல்லித்தான் நான் பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நான் தனியாக கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ஆனால் அண்ணா ஆரம்பித்த கட்சியைத் தான் கருணாநிதி நடத்திக் கொண்டு இருக்கிறார். அந்த கட்சியில்தான் ஸ்டாலின் இருந்து கொண்டு இவ்வாறு பேசுகிறார். நீங்கள் தனியாக கட்சி ஆரம்பியுங்கள். உங்களுக்கு அதன் வலி தெரியும்.
எங்கு போயிருந்தார் அஞ்சா நெஞ்சன்..?
இன்றைக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரி என்று பேசி வருகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியின் போது இவர் எங்கே சென்றிருந்தார்.
ஜனநாயகத்தின் ஒரு தூணாக விளங்கும் பத்திரிகைகளை முதல்வர் கருணாநிதி மிரட்டி வருகிறார். இதனால் நமது செய்திகள் பெரும்பாலான பத்திரிகைகளில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
இந்த பொதுக்குழுவில் ஜனநாயக மீட்பு போராட்டத்தில் உண்மையில் அக்கறையும், ஈடுபாடும் கொண்ட அரசியல் இயக்கங்கள் தேமுதிகவோடு இணைந்து செயல்பட முன்வருமே யானால் அது பற்றி முடிவெடுக்கவும் அவர்களோடு பேசவும் எனக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதை வைத்து அனைவரும் கூட்டணி என்று பேசுவார்கள். எனக்கு திமுக, அதிமுகவை அறவே பிடிக்காது. தொண்டர்களை அக்கட்சியிடம் காவடி தூக்க வைக்க மாட்டேன். இவ்வாறு நான் சொன்னதும் காங்கிரசுடன் கூட்டணியா என்று கேட்பார்கள்.
எவ்வளவு நாள் பணம் கொடுப்பார்கள்...?
திமுக, அதிமுகவினர் எவ்வளவு நாள்தான் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குவார்கள். மக்கள் ஒருநாள் விழித்தெழுவார்கள்.
தேமுதிக நிச்சயமாக முதலிடத்தை பிடிக்கும். தேமுதிகவுக்கு டிவி, பத்திரிகை இல்லை என்ற கவலை இனி வேண்டாம். இரண்டும் வருகிறது. அவை இரண்டும் வரும்போது விஜயகாந்த் யார்? விஜயகாந்தின் தொண்டர்கள் யார்? என்று அனைவருக்கும் தெரியும். அடுத்த ஆண்டு பொதுக்குழு இதைவிட பிரம்மாண்டமாக அமையும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications