'ரிலையன்ஸை தாக்கினால் நாயுடுவுக்கு வலிப்பது ஏன்?'

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்தில் சதி இருப்பதாகவும், அதில் அம்பானி சகோதரர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்தியால் ஆந்திராவில் உள்ள ரிலையன்ஸ் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதற்கு தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். ரிலையன்ஸ் கடைகள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் எனக் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராஜமுந்திரி காங்கிரஸ் எம்.பி அருண்குமார் கூறுகையில், 'ராஜசேகரரெட்டி சாவில் சதி இருப்பதாக ரஷ்ய பத்திரிகை செய்தி வெளியிட்டது.
அதில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இதற்கு முன்பு ஆலோசகராக பணியாற்றிய லாரன்ஸ் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள எரிவாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் மொத்தமாக எடுத்துச் செல்ல முயன்றது.
அப்போது ராஜசேகரரெட்டி ஆந்திர மக்களின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்த பிறகுதான் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடிவும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். இது முகேஷ் அம்பானிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்தில் ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டார் என்று லாரன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே நாங்கள் ராஜசேகரரெட்டி சாவில் மர்மம் இருப்பதை அறிந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தோம் இந்த நிலையில் அவர் சதி காரணமாக கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியானதால் உணர்ச்சிவசப்பட்டோம்.
ஆனால் ரிலையன்ஸ் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. கடந்த 1 மாத காலமாக நடந்த தெலுங்கானா கலவரம் பற்றி எவ்வித கவலையோ, அக்கறையோ இல்லாமல் இருந்தார் சந்திரபாபுநாயுடு.
திடீரென ரிலையன்சுக்கு ஆதரவாக பேட்டி அளித்திருப்பது எங்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்திரபாபு நாயுடுக்கும் முகேஷ் அம்பானிக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெலுங்கானா பிரச்சனை தொடர்பாக கலவரம் நடந்தபோது பல ஆயிரம் கடைகள் நெறுக்கப்பட்டன. சினிமா படப்பிடிப்பு தளங்கள் எரிக்கப்பட்டன.
அரசுக்கு சொந்தமான அலுவலகங்கள், ஆயிரக்கனக்கான பஸ்கள் உடைக்கப்பட்டன. அப்போது போலீசார் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ரிலையன்ஸ் கடைகள் தாக்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications