புலிகளுடனான சண்டை முடிந்து விட்டது - இனி வராது: ராஜபக்சே

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சே தமிழர் தாயகப் பகுதிகளில் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
மன்னார், யாழ்ப்பாணம் சென்று பேசினார். மன்னாரில் நடந்த கூட்டத்தில் ராஜபக்சே பேசுகையில், மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக, வன்முறை சம்பவங்களால் கடுமையான துன்பங்களை சந்தித்து விட்டனர். கண்டிப்பாக, இனிமேல் அதுபோன்ற வன்முறை சம்பவங்கள் எதுவும் மீண்டும் நடக்காது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை முடிந்து விட்டது. மீண்டும் நடக்கப் போவது இல்லை. இந்த பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது முழு வீச்சில் அந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்கள், கோவில், தேவாலயம், மசூதி போன்ற இடங்களுக்கு கடந்த காலங்களில் சுதந்திரமாக செல்ல முடியாத நிலை இருந்தது.
தற்போது எந்த பயமும் இன்றி சுதந்திரமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே.
பின்னர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசாமி கோவில் ஆகிய பகுதிகளுக்கும் ராஜபக்சே சென்றார்.
அவரது வருகையையொட்டி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராஜபக்சேவின் வருகை யாழ்ப்பாண மக்களிடையே எந்தவித ஆர்வத்தையும் கிளப்பவில்லை. யாரோ ஒரு தலைவர் வருகிறார் என்ற அளவிலேயே யாழ் பகுதி மக்கள் சுரத்தின்றி காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், தமிழர்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையைக் கூட பேசவில்லையாம் ராஜபக்சே. மாறாக, இலங்கைப் படையினர் பெற்ற வெற்றியைத்தான் பிரதானமாக பேசியுள்ளார். படையினரின் வெற்றி வீண் போகாது, வீண் போகவும் விட மாட்டேன் என்று அவர் பேசியது, தொடர்ந்து தங்களை அடிமைகளாகவே வைத்திருப்பேன் என்று ராஜபக்சே மறைமுகமாக சொல்வது போல உள்ளதாக தமிழர்கள் கருதுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications