'ஆளும் கட்சியை பிரதிபலிக்கும் கண்ணாடி தான் எதிர்க்கட்சி'
சென்னை: ஆளும் கட்சி எனும் முகத்தை பிரதிபலிக்கிற கண்ணாடியாக எதிர்க்கட்சி இருக்க வேண்டும். அந்தக் கண்ணாடி தரமானதாக இருக்க வேண்டுமே தவிர ரசம் போன கண்ணாடியாக இருக்கக் கூடாது என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து ஸ்டாலின் பேசுகையில்,
ஆளுநர் உரையில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். மக்கள் நல திட்டங்கள் சிலவற்றை சிலர் எதிர்ப்பதால் அவர்களை நாங்கள் எதிரிகளாக கருத மாட்டோம். ஆனால் மக்களுக்கு எதிரானவர்களாக அவர்கள் மாறிவிடக் கூடாது என்ற அச்ச உணர்வு எங்களுக்கு உள்ளது.
ஆளும் கட்சி எனும் முகத்தை பிரதிபலிக்கிற கண்ணாடியாக எதிர்க்கட்சி இருக்க வேண்டும். அந்தக் கண்ணாடி தரமானதாக இருக்க வேண்டுமே தவிர ரசம் போன கண்ணாடியாக இருக்கக் கூடாது.
இந்த ஆளுநர் உரை அலங்கோலம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கூறினார். இது பொங்கல் திருநாளுக்கு போடும் அழகுமிகு மாக்கோலம். மக்கள் மனங்கவரும் பூக்கோலம். திட்டங்களின் அணிவகுப்பு நடத்தும் ஊர்கோலம். அதனால்தான் இதை பூகோளம் பாராட்டுகிறது.
அது மட்டுமல்ல பத்திரிகைகளும், பல்வேறு கட்சித் தலைவர்களும், பல அமைப்புக்களும் கூட பாராட்டி உள்ளன. இது மற்ற கவர்னர் உரைகளின் தொகுப்பு என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். தொலைநோக்கு திட்டம் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
21லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படுவது அதில் முதல்கட்டமாக 3 லட்சம் வீடுகள் 1800 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருப்பது என்பதெல்லாம் மறுபதிப்பா?. தாட்கோ கடன் தள்ளுபடி, சுனாமி மீனவர் கடன் தள்ளுபடி என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வந்திருக்கிறதே, இதுவெல்லாம் மறுமதிப்பா?.
இந்த அரசை பொறுத்தவரை சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்து வருகிறோம். விலைவாசியை கட்டுப்படுத்த அரசு பல முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணி இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி 2012 டிசம்பருக்குள் முடிக்கப்படும். 5 தொகுதிகளாக இந்த பணிகள் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications