'டிஸ்மிஸ்' ஆர்டரில் இருந்து தப்பும் ராணுவ ஊழல் அதிகாரி
டெல்லி: ராணுவ தளபதியின் மூத்த ஆலோசகர் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். பதவியில் இருந்து இவர் டிஸ்மிஸ் செய்யப்படும் முன்பாகவே அவர் பணி ஓய்வு பெறுவது ராணுவத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டார்ஜிலிங் பகுதியில் இந்திய ராணுவ மையத்தின் அருகில் உள்ள 70 ஏக்கர் நிலத்தை சிலிகுரியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வாங்க திட்டமிட்டார். இதற்கு ராணுவத்தின் சார்பில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தச் சான்றிதழ் முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ராணுவ செயலாளரும், ராணுவ தளபதி தீபக் கபூரின் மூத்த ஆலோசகர்களில் ஒருவருமான லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷ் உட்பட 4 உயரதிகாரிகள் மீது ஊழல் புகார் கூறப்பட்டது.
துறைரீதியாக நடத்தப்பட்ட விசாரணையிலும் அதிகாரிகள் ஊழல் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த நான்கு உயரதிகாரிகளுக்கும்ம் இப்பிரச்சனை தொடர்பாக விளக்கமளிக்குமாறு ராணுவ தளபதி தீபக் கபூர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
ஓரிரு நாட்களில் இந்த நோட்டீஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்கும் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், ஜெனரல் அவதேஷ் பிரகாஷ் வரும் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் அவர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனினும் ஜெனரல் பிரகாஷ் ராணுவ சட்டப்படியான தண்டனையில் இருந்து தப்பமுடியாது. ஓய்வு பெற்றாலும் மூன்று ஆண்டுகள் வரை அவர் மீது துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஊழல் அதிகாரிகள் நோட்டீசுக்கு பதில் அளித்த பின்னர் அவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என ராணுவத் தளபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications