அதிகாரிகள் வராவிட்டால் முறையிடலாம்-குப்தா
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க அல்லது திருத்த 22ம் தேதிக்குள் அதிகாரிகள் வராவிட்டால் முறையிடலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.
நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வீடுவீடாக சென்று ஆய்வு செய்வார்கள்.
வாக்காளர்களின் விவரங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அதாவது பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகியவை குறித்து அவர்களிடம் தெரிவிக்கலாம்.
விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள், அதாவது அந்த பகுதியில் சாதாரணமாக வசித்து வருபவர்களில் 1.2.2009 அன்று 18 வயது மற்றும் அதற்கு மேல் வயது உள்ளவர்கள் குறித்த விவரங்களை தனி பட்டியலில் (படிவம் பி) அதிகாரிகள் குறித்துக்கொள்வார்கள்.
அதிகாரிகள் கொண்டுவரும் சரிபார்ப்பு பட்டியல் மற்றும் படிவத்தில் வாக்காளர்கள் கையொப்பமிட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பதற்கு வயது மற்றும் இருப்பிடத்திற்கான சான்றிதழை வாக்குச்சாவடி நிலை அதிகாரியின் 2 வது வருகையின்போது அவரிடம் அளிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு அதிகாரிகள் வீட்டிற்கு வந்ததற்கு அடையாளமாக ஒரு சிறிய ஸ்டிக்கர் வீட்டின் முன்புற கதவில் அல்லது அருகில் ஒட்டப்படும்.
வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வாக்காளர் சரிபார்ப்புக்காக தங்கள் பகுதிக்கு 22 ந்தேதிக்குள் வராமல் இருந்தால் அதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் (சென்னை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி கமிஷனர், இதர பகுதிகளில் மாவட்ட கலெக்டர்கள்) தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications