'பகைக்கோ பஞ்சமில்லை'-விஜய்காந்த் வாழ்த்து!
சென்னை: இன்று பசியும் நம்மை வாட்டுகிறது, இனம் தெரியாத வைரஸ் நோய்கள் நம்மை தாக்குகின்றன. பகைக்கோ பஞ்சமில்லை, தமிழினப் படுகொலையே நடந்துள்ளது. எனினும் இப்பொங்கல் விழாவை இனிதே வரவேற்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்
அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தி:
பசி போகட்டும், பிணி நீங்கட்டும், பகை விலகட்டும், மழை பெய்யட்டும், வளம் சுரக்கட்டும் என்று முரசு கொட்டி விழா கொண்டாடுவது பண்டைய தமிழ் மரபு.
ஆனால் இன்று பசியும் நம்மை வாட்டுகிறது, இனம் தெரியாத வைரஸ் நோய்கள் நம்மை தாக்குகின்றன. பகைக்கோ பஞ்சமில்லை, தமிழினப் படுகொலையே நடந்துள்ளது. எனினும் இப்பொங்கல் விழாவை இனிதே வரவேற்போம்.
பொங்கல் விழா, தொன்றுதொட்டு கொண்டாடப்படும் தமிழர் திருநாள் உழைப்புக்கு உரி நாள், உணவளிக்கும் உழவர்களுக்கு மகிழ்ச்சித் திருநாள். உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கு நாம் காட்டும் நன்றித் திருநாள். அறிவுக்கு ஒத்த நாள், தமிழர்களின் புத்தாண்டு திருநாள், தானே உழைத்து ஈட்டிய செல்வத்தை உற்றாரோடும், உறவினரோடும் தம் வீட்டில் சிறப்பாக கொண்டாடும் இன்பத் திருநாள் இந்த பொங்க ல்நாள்.
விழா என்றால் பணக்காரர்களுக்கு கொண்டாட்டம், ஆனால் ஏழைகளுக்கோ திண்டாட்டம், ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாத சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்பதே நமது குறிக்கோள். இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்பது நம் மூல முழக்கம்.
இலவசத் திட்டங்கள் தேவைப்படுகின்றது என்றால், ஏழைகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டு. சமூக அமைப்பில் எந்தவித மாற்றமும், செய்யவில்லையென்றால் ஏழைகளும், பணக்காரர்களும் என்றும் இருப்பார்கள். ஏழை பணக்காரர்கள் என்ற கருத்து வேறுபாடு இலவச திட்டங்களால் மாறாது.
ஏழைகளே இல்லாத நாடு எங்கள் தாய் நாடு, ஏழைகளே இல்லாத நாடு எங்கள் தமிழ்நாடு என்ற நிலையை எட்டும் வரை நம்முடைய பணி ஓயாது.
இதற்கிடையில் தேமுதிக சார்பில், இந்த ஆண்டும் வழக்கம் போல் ஏழைகளுக்கு உதவிடும் நலப்பணிகளை கழகத் தோழர்கள் இன்றே மேற்கொள்ள வேண்டும், பச்சரிசி, கரும்பு, மஞ்சள், புதுப்பானை, வெல்லம், இலவச வேட்டி, சேலை போன்ற பொருட்களைத் தங்களால் இயன்ற அளவுக்கு வழங்கி பொங்கல் விழாவை தமிழ்நாட்டு மக்களின் மகிழ்ச்சிகரமான விழாவாக ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொங்கல் விழாவையொட்டி சென்ற ஆண்டு அரசு வழங்கிய இலவச பொங்கல் பொருட்கள் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. மக்கள் வரிப் பணத்தில் கொடுக்கும் அரசுக்கும் நம்முடைய உழைப்பில் நாம் உதவுவதற்கும் இதுதான் வேறுபாடு.
இந்தப் பொங்கல் நன்னாளில் பால் பொங்குவது போல் உங்கள் ஒவ்வொருடைய இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும். இத்தகைய மகிழ்ச்சியும் மன நிறைவும் என்றும் உங்கள் வாழ்க்கையில் மலரட்டும் என்று எனது இதயமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications