ஈழப்போர்: 27,000 இலங்கை ராணுவத்தினர் பலி-கோத்தபய
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போரின் போது இலங்கை ராணுவப் படையின் வீரர்கள் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கோத்தபய ராடபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையிலான போரின் போது இலங்கை ராணுவத்தினர் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே தம்பியும், பாதுகாப்பு துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசியபோது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 27 ஆயிரம் வீரர்கள் பலியானதாக கோத்தபய தெரிவித்தார்.
போரின் போதும், அதற்கு முன்பும் இலங்கை அரசு தனது ராணுவத்தின் தரப்பில் ஏற்படும் சேதாரங்களை குறைத்து வெளிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வன்முறை: ஒருவர் பலி
இலங்கையில் அதிபர் தேர்தலையொட்டி வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் நடந்துவருகின்றன.
தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒருமாதத்திற்குள்ளாக இதுவரை 251 வன்முறை சம்பவங்கள் நடந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் ராணுவ தளபதி சரத்ஃபொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது மர்ம ஆசாமிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார்.
ஃபொன்சேகா ஆதரவாளர்கள் எட்டுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தேர்தல் வன்முறையால் ஏற்பட்டுள்ள முதல் பலி இது என போலீசார் கூறினர்.
தாக்குதல் நடந்த தாங்கல்லே என்ற ஊர் ராஜபக்சேவின் சொந்த மாவட்டமான ஹம்பன்டோடாவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications