பொங்கல்: நிரம்பி வழியும் ரயில்-பஸ்கள், மக்கள் அவதி
நெல்லை: பொங்கல் பண்டிகையை ஓட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள எந்த ஊருக்கும் செல்ல ரயில்கள் மற்றும் பஸ்களில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கூடுதலாக சிறப்பு பஸ் மற்றும் ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளை உலகெங்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இன்று முதல் 16ம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜன 17ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் 18ம் தேதிதான் அரசு அலுவலங்கள், கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர்களில் வசிக்கும் நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாட சொந்த ஊருக்கு வர திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக பலர் ரயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். இது தவிர ரயில்வே நிர்வாகம் அறிவித்த சிறப்பு ரயில்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன. தட்கல் டிக்கெட்டுகளும் தீர்ந்து விட்டன.
மக்கள் கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தும் புரோக்கர்கள் முன்பதிவு டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு பேரம் பேசி விற்கின்றனர். ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளதால் டிக்கெட் புரோக்கர்கள் காட்டில் பணமழை பெய்கிறது. டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் பலர் நேற்று இரவே மேற்கொண்டுவிட்டனர்.
இதனால் நேற்று சென்னை, கோவை, பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து இயக்கப்பட்ட ரயில், பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் நெரி்சல் அதிகம் காணப்பட்டது.
சென்னைக்கு தினமும் இயக்கப்படும் கன்னியாகுமரி ஆனந்தபுரி, நெல்லை, முத்துநகர், குருவாயூர், பெங்களூர்-தூத்துக்குடி, மைசூர் எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்களில் ஜனவரி 20ம் தேதி வரை இடமில்லை. இதனால் வாடகை கார் கார்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து நேற்று பகலில் இயக்கப்பட்ட வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மாலையில் இயக்கப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இரவு இயக்கப்பட்ட கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், ராமேஸ்வரம் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.
இந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில், நூற்றுக்கணக்கான பயணிகள் உட்கார இடமின்றி நின்று கொண்டே பயணம் செய்தனர்.
பொதிகை, நெல்லை, பாண்டியன், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்து இடம் கிடைக்காதவர்களும், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய வந்த பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.
இந்த ரயில்களில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்ய வந்த பயணிகள், மூன்று மணி நேரம் முன்பாகவே வந்து எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் காத்திருந்தனர்.
இப்பயணிகள் பெட்டிக்கு செல்லும் போது நெருக்கடியில் சிக்கிவிடாமலிருக்க, எழும்பூர் ரயில்வே போலீசார் வரிசையில் நிற்க வைத்து உதவி செய்தனர். இருந்தாலும் இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் நூற்றுக்கணக்கானோர் உட்கார இடமின்றி நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்று மாலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ரயிலில் பயணம் செய்ய, சென்னையில் உள்ள ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில், நேற்று காலை 6 மணியிலிருந்து நூற்றுக்கணக்ககான பயணிகள் காத் திருந்தனர்.
ஆனால் முன்பதிவு துவங்கப்பட்ட 10 நிமிடத்தில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இரண்டு மணி நேரத்தில் ஏசி வகுப்புகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகி திரும்பிச் சென்றனர்.
சிறப்பு ரயில்களும் நிரம்பின..
இதற்கிடையே, கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. வழக்கம் போல இதுவும் சில நிமிடங்களிலேயே ஃபுல் ஆகிப் போனது.
அதன்படி, நெல்லையில் இருந்து இன்று (புதன்கிழமை) மதியம் 3.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் காலை 8.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கருர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் (0617) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
அதேபோல், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 15-ந் தேதி சிறப்பு ரயில் (0618) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், செங்கனூர், திருவலா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலிவா, திரிசூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 16-ந் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து இரவு 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்றுகாலை தொடங்கியது. ஆனால் இந்த ரயில்களிலும் டிக்கெட்டுகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
600 சிறப்பு பேருந்துகள்:
இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஜனவரி 17ம் தேதி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications