சீனாவிலிருந்து வெளியேறும் கூகுள்!!

சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராகத் திகழ்கிறது கூகுள்.
இந்த நிறுவனம் வெளியேறும் பட்சத்தில், அதைப் பின்பற்றி வேறு சில நிறுவனங்களும் கூட வெளியேறும் ஆபத்து உள்ளது. இன்னொரு பக்கம், கூகுளுக்கு நேர்ந்த சங்கடத்தை சர்வதேச வர்த்தக சுதந்திரத்துக்கு நேர்ந்த அச்சுறுத்தலாகப் பார்க்கிறது அமெரிக்கா.
இந்த விஷயத்தில் உடனடி விளக்கம் தேவை என சீன அரசிடம் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனே கேட்டுள்ளார்.
என்ன நடந்தது?
சீனாவின் பெரும் சந்தையைக் கலக்க வேண்டும் என்ற நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்குள் கால் வைத்தது கூகுள். ஆனால் அப்போதே கூகுளுக்கு சீனா தனது கட்டுப்பாடுகள், தணிக்கை விதி முறைகளைக் கூறிவிட்டது. இவற்றுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே சீனாவில் இணையதளம் இயங்க முடியும் என்று கூறப்பட்டுவிட, அதை முழுமையாக ஒப்புக் கொண்டது கூகுளும்.
ஆனால் உலகம் முழுக்க உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், சர்வாதிகாரத்துக்கு எதிரான இயக்கங்கள் கூகுளையே பிளாக் மற்றும் மின்னஞ்சல் சேவைக்குப் பயன்படுத்துகின்றன. கூகுள் சேவை மூலம் இந்த அமைப்புகள், தனக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பப்படுவதாக நம்புகிறது சீனா.
பெயரளவுக்கு மார்க்கெட் பொருளாதாரம் பேசினாலும், தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சி முறை சர்வாதிகாரத்தை நிலை நாட்டி வரும் சீனாவுக்கு இதில் மகா எரிச்சல்.
இந்த நிலையில்தான் கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மற்றும் ப்ளாக்கர் சேவைகளை குறிவைத்துத் தாக்குதல் நடந்தது. ஆராய்ந்ததில் இதன் ஆரம்பமே சீனாதான் என்பது தெரிந்தது.
எனவே இனியும் சீன கட்டுப்பாடுகளுக்கு தலைவணங்குவது சரியாக வராது என்றும், சீனாவிலிருந்து வெளியேருகிறோம் என்றும் அறிவித்துள்ளது கூகுள். கூகுளைப் போன்ற சேவைய வழங்கும் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் இந்த சைபர் தொல்லைக்கு ஆளாகியுள்ளதால் அவர்களும் கூகுள் வழியில் வெளியேறக்கூடும் என்பதால், அடுத்த நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறது கூகுள்.












Click it and Unblock the Notifications