ஹாக்கி வீரர்கள் சமரசம்-பயிற்சியில் பங்கேற்க சம்மதம்
புனே: ஹாக்கி வீரர்களுக்காக ரூ.ஒரு கோடி வழங்குவதாக சகாரா நிறுவனம் அறிவித்ததை அடுத்து பிரச்சனை சுமூகமான முடிவுக்கு வந்துவிட்டதாக ஹாக்கி சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ள நிலையில், வீரர்களுக்காக ரூ.5 கோடி வழங்குவதாக உ.பி.முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
கடந்தாண்டு நிலுவையில் உள்ள ஊதியத் தொகை மற்றும் கிரேடு முறை ஆகியவற்றை வலியுறுத்தி இந்திய ஹாக்கி வீரர்கள் பயிற்சி முகாமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஹாக்கி சங்க நிர்வாகிகள், வீரர்கள் தரப்பினருடன் கடந்த சனிக்கிழமை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நிலுவைத் தொகை வழங்குவதற்கான கெடு குறித்து தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை எனக் கூறி வீரர்கள் நேற்று தங்களின் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.
48 மணி நேரத்துக்குள் பயிற்சியில் பங்கேற்காவிட்டால் உலககோப்பை போட்டியில் ஆட முடியாது என்று வீரர்களுக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் ஒரு வீரரை அனுமதிக்கவில்லை என்றாலும் ஒட்டுமொத்த பேரும் அணியில் இருந்து விலகுவோம் என வீரர்கள் பதிலுக்கு சவால் விட்டனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஹாக்கி அணியின் விளம்பரதாரரான சகாரா நிறுவனம் ரூ.1 கோடியை உடனடியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தொகையை வீரர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் சகாரா நிறுவனம் கூறியுள்ளது.
ஹாக்கி வீரர்கள் போராட்டதை கைவிட்டு, நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்தால் எதிர்காலத்தில் பல சலுகைகள் வழங்கப்படும் என ஹாக்கி கழக தலைவர் அசோக் உறுதி அளித்துள்ளார்.
ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ்பிள்ளை மற்றும் இந்திய ஒலிம்பிக் கழக தலைவர் சுரேஷ் கல்மாடி ஆகியோர் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஹாக்கி வீரர்கள் நாளை முதல் பயிற்சியில் பங்கேற்பார்கள் என்றும் சுரேஷ் கல்மாடி தெரிவித்தார்.
இவ்வாறாக, ஸ்பான்சர் நிறுவனத்தின் மூலம் ஒரு கோடி நிதியை பெற்று பிரச்சனையை நிர்வாகிகள் சமாளித்துள்ள நிலையில், வீரர்களுக்கு ரூ.5 கோடி தர த்தயார் என உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இதனால், தற்போது புனே பேச்சுவார்த்தையில் ஏற்பட்டதாக கூறப்படும் ரூ.ஒரு கோடி சமரச திட்டத்தை வீரர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாடும் வீரர்களின் கூடுதல் சம்பளத்துக்கான செலவை மத்தியப் பிரதேச அரசு ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications