ஹைத்தி பூகம்பம்- பலி ஒரு லட்சத்தை தாண்டும்!
போர்டாபிரின்ஸ்/டெல்லி: ஹைத்தியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது.
அத்துடன், ஹைத்தியில் மிஷனரி பணிகளில் ஈடுபட்டிருந்த ஏராளமான இந்திய கிறிஸ்தவ பாதிரிமார்கள் என்னவானார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
ஹைத்தி நிலநடுக்கத்தில் சிக்கியதாக கூறப்பட்ட 150 இந்தியவைச் சேர்ந்த ஐநா பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்தது. ஆனால் ஐ.நா. தரப்பில் உறுதியான தகவல் இல்லை.
இதற்கிடையே, பல்வேறு அறக்கட்டளை மற்றும் மிஷனரிகளில் பணியாற்றிய இந்திய கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் ஊழியர்களின் நிலை குறித்து நல்ல உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.
இதுபோன்று சுமார் 40 முதல் 50 இந்திய குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக இருப்பதாக டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
போர்டாபிரின்ஸ் நகரில் நாடாளுமன்றம், வரி அலுவலகம், உட்பட பல பகுதிகளிலும் வீடுகள், ஹோட்டல்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என கட்டிடங்கள் இடிந்து பேரழிவு நிலை ஏற்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் உடல்களை மீட்பதும், உயிருக்கு போராடுபவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதும் என மீட்புப் படையினர் துரிதகதியில் செயல்பட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் இழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் பலி எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என பிரதமர் ஜீன்மேக்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆதிபர் ரெனே பிரெவல் கூறுகையில், 'ஐநா அலுவலகம் இடிந்து ஹைத்திக்கான ஐநா திட்ட தலைவர் ஹெதி அன்னாபி இறந்துவிட்டார்' என்றார்.
எனினும் ஐநா தரப்பில் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை. 14 அலுவலர்கள் இறந்ததாகவும், 56 பேர் காயமடைந்ததாகவும், 150 பேர் காணவில்லை என்றும் ஐநா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஹைத்தியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் உட்பட ஏராளமான நாடுகள் முன்வந்துள்ளன.
இந்தியா தரப்பில் நிவாரண நிதியாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications