மும்பை-'மாயமான' ஐஸ்லாந்து அதிபர் மனைவி!
மும்பை: மும்பை டிரைடன்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ்லாந்து அதிபரின் மனைவி திடீரென மாயமானதால் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐஸ்லாந்து நாட்டின் அதிபர் ஒலஃபர் ரக்னர் கிரிம்சன் இந்தியா வந்துள்ளார். அதிபருடன் மனைவியும் ஐஸ்லாந்து நாட்டின் முதல் பெண்மணியுமான டாரிட் முசாயிஃப்பும் இந்தியா வந்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள அதிபருக்கும், அவரின் மனைவிக்கும் உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த திங்கள்கிழமை இருவரும் மும்பைக்கு வந்தனர். முதலில் டாரிட் வந்துவிட்டார். அவரை மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்டலில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி அதிபரின் மனைவி டாரிட்டை காலையில் ஹோட்டலுக்குள் அழைத்து வந்து விட்டனர் பாதுகாப்பு அதிகாரிகள். பகல் 11.30 மணி வாக்கில் திடீரென அதிபரின் மனைவியை ஹோட்டலில் காணவில்லை.
ஹோட்டலுக்குள் அவர் தங்கியிருந்த பகுதியிலேயே காவல் போடப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிபரின் மனைவியை காணவில்லை என்றதும் போலீசார் எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்றனர். அப்பகுதி முழுவதும் சுமார் ஆறு மணி நேரம் தேடியும் கிடைக்காததால் பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பதட்டமடைந்தனர்.
உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தயாரானார்கள். மும்பை முழுவதும் உள்ள காவல் நிலையங்களை உஷார்படுத்த கட்டளைகளை பிறப்பிக்க தயாரான நிலையில் அதிபரின் மனைவி சாவகாசமாக ஹோட்டல் வாசலில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
உதவியாளர்கள் யாரும் உடன் இல்லாமல் கையில் நான்கைந்து பைகளுடன் ஷாப்பிங் சென்று வந்திருந்தார் டாரிட்.
இதைப் பார்த்தும் பெருமூச்சு விட்ட போலீசார் பின்னர் அவரை கவனமாக கண்காணிக்கத் தொடங்கினர். அதிபர் மனைவியின் தரப்பில் விசாரித்த போது, அவருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ வருவது பிடிக்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றுவந்தார் என்று கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications