மரபணு கத்திரி: ஜெய்ராம்-விஞ்ஞானிகள் வாக்குவாதம்
கொல்கத்தா: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் தொடர்பான முதலாவது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டு விட்டது. இரு தரப்பும் கடுமையாக வாதிட்டனர்.
பிடி பிரிஞ்சால் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் உற்பத்தியை வணிக ரீதியில் அறிமுகப்படுத்துவது குறித்த முதலாவது பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஜெய்ராம் ரமேஷ் உரையாடினார். அப்போது விஞ்ஞானிகளின் சில கருத்துக்களை ஜெய்ராம் ரமேஷ் நிராகரித்ததால் அவர்கள் வெகுண்டனர். கடும் வாக்குவாதம் மூண்டது.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், மரபணு மாற்ற கத்திரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை அருகில் சென்று சமாதானப்படுத்த முயன்றார் ரமேஷ்.
மன்சான்டோ நிறுவனத்தின் ஏஜென்ட் போல ஜெய்ராம் ரமேஷ் செயல்படுவதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டினர்.
இதனால் கோபமடைந்த ரமேஷ், அப்படி இருந்திருந்தால் நான் உங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க மாட்டேன். கடந்த அக்டோபர் மாதமே இதை வணிக ரீதியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருப்பேன் என்றார் சற்று வேகமாக.
பின்னர் விஞ்ஞானிகள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இதேபோன்ற கூட்டங்கள் புவனேஸ்வர், ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத், சென்னையிலும் நடைபெறும். இக்கூட்டங்களுக்குப் பின்னர் பிப்ரவரி 5ம் தேதி இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றார் ரமேஷ்.












Click it and Unblock the Notifications