எம்.கே. நாராயணன் ஆளுநராகிறார்-அவரது பதவியில் மேனன்

முன்னாள் இன்டெலிஜெஸ் பீரோ (ஐ.பி.) தலைவரான நாராயணன், காங்கிரசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.
பிரதமர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உளவுப் பிரிவுகள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பதவி இது.
தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது, இலங்கை விவகாரத்தை கையாண்ட முறை என முக்கிய விவகாரங்களில் நாராயணனின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.
மேலும் டெல்லி அதிகார மையத்தில் மலையாளிகளை 'திணித்து' மத்திய அரசை இயக்குவதே கேரளா தான் என்ற பிரமையையும் ஏற்படுத்தியதிலும் நாராயணனுக்கு முக்கிய பங்கு உண்டு.
இந் நிலையில் அவரை மேற்கு வங்க ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், மேற்கு வங்க ஆளுநராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவரை நியமி்க்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மேற்கு வங்கத்திலும் அதை ஒட்டிய வட கிழக்கு மாநிலங்களிலும் மாவோயிஸ்டுகள் தலை தூக்கி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாராயணனை ஆளுநராக்க பிரதமர் விரும்புவதாகத் தெரிகிறது.
மேலும் சீனாவின் ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருவதால் வட கிழக்குப் பிராந்தியத்தை கண்காணிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் நாராயணன் அந்தப் பகுதியில் இருப்பது நல்லது என மம்தாவிடம் பிரதமர் கூறியுள்ளார்.
ஆனால், மம்தா பானர்ஜி பிடிவாதமாக இருந்தால் நாராயணன் மகாராஷ்டிரம் அல்லது ஆந்திர ஆளுநராக்கப்படுவார் என்கிறார்கள்.
நாராயணன் விலகுவதால் காலியாகும் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இன்னொரு மலையாளியான சிவசங்கர மேனன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இவர் கிட்டத்தட்ட நாராயணனின் நிழல் தான்.
இந்தப் பதவிக்கு அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ரொனென் சென்னின் பெயரும் அடிபட்டது. ஆனால், அவர் தனக்கு இந்தப் பதவியி்ல் விருப்பமில்லை என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை எதிர்த்த பாஜக-இடதுசாரிகளை 'தலையில்லா கோழிகள்' என்று வர்ணித்து சர்ச்சையில் சிக்கியவர் சென் என்பது குறிப்பிடத்தக்ககது.
ஆளுநராக சிவராஜ் பாட்டீல்:
இந் நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆந்திரா அல்லது பஞ்சாப் மாநில ஆளுநராக நியமி்க்கப்படலாம் என்று தெரிகிறது.
ஆந்திர ஆளுநராக இருந்த என்.டி. திவாரி செக்ஸ் புகாரில் சிக்கி ராஜினாமா செய்யததால் அந்தப் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியை சட்டீஸ்கர் மாநில கவர்னராக உள்ள ஈ.எஸ்.எல்.நரசிம்மன் கூடுதலாக கவனித்து வருகிறார்.
ஆந்திராவில் சகஜநிலை திரும்ப அவர் எடுத்த சில நடவடிக்கைகள் பலனளிக்க ஆரம்பித்துள்ளதால் அவரையே ஆந்திராவின் கவர்னராக நியமி்க்கலாமா என்றும் மத்திய அரசு யோசித்து வருகிறது.
அதே போல காங்கிரஸ் மூத்த தலைவரான சந்தோஷ் மோகன் தேப் ஏதாவது ஒரு மாநில ஆளுநராக்கப்படுவார் என்று தெரிகிறது.
பரூக் கவர்னராகிறார்?:
அதே போல ஜார்க்கண்ட் அல்லது சட்டீஸ்கர் மாநில கவர்னராக முன்னாள் மத்திய அமைச்சரும், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சருமான எம்.ஓ.எச். பரூக் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
இவர் கடந்த 2007ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் அவருக்கு 3 முறை பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. சமீபத்தில் இந்தப் பதவி காலம் முடிந்து அவர் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மோஷினா கித்வாயையும் ஆளுநராக்க சோனியா விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால், அவர் தீவிர அரசியலில் நீடிக்க விரும்புவதாகக் கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications