சாப்ட்வேர் பாதிப்பால் முடங்கிய டெல்லி ஏர்போர்ட்!
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமானப் போக்குவரத்து மையம், சாப்ட்வேர் கோளாறால் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் விமானப் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இன்றும் காலையில் பனி மூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே கடும் பனி மூட்டத்தால் டெல்லியில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சாப்ட்வேர் கோளாறு காராணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விமானங்கள் இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் வழி காட்டும் முக்கிய மையம் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம். இங்குள்ள சாப்ட்வேரில் கோளாறு ஏற்பட்டதால் கருவிகள் இயங்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட 40 விமானங்கள் இறங்குவதும், புறப்படுவதும் தாமதமானது. ஏற்கனவே பனி மூட்டத்தால் பல விமானங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவற்றோடு கம்ப்யூட்டர் கோளாறும் சேர்ந்து கொண்டதால் கிட்டத்தட்ட 100 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பை சந்தித்தது. ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆன பின்னரே கம்ப்யூட்டர் கோளாறு சரியானது. பின்னரே கட்டுப்பாட்டு மையம் இயங்கத் தொடங்கியது. கம்ப்யூட்டர் செயிலிழந்து கிடந்த நேரத்தில் மேனுவலாக விமானங்களை கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இறங்கினர்.
இன்றும் பனி மூட்டம் காரணமாக விமான போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது. இன்று காலை கிட்டத்தட்ட 15 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 14 விமானங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றன. ஒரு ஜெட்லைட் விமானம் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications