பட்டா மாற்ற லஞ்சம்-சிக்கினார் விஏஓ
நெல்லை: பட்டா மாற்றுவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் ரவி ஆபிரகாம். நிலக்கிழார். இவரது மனைவி சீதாவின் பெயரில் நெல்லை மாவட்டம் ஆற்றாங்கரை பள்ளிவாசல் பகுதியில் 24 ஏக்கர் நிலம் உள்ளது.
கூட்டுப்பட்டாவில் உள்ள இந்த நிலத்தை சீதாவின் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு ரவி ஆபிரகாம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்து அனுப்பும்படி கரைசுத்துபுதூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலனுக்கு தாசில்தார் உத்தரவிட்டார்.
கூட்டு பட்டாவில் அஸ்ரம் அலி என்பவரது பெயர் இடம் பெற்று இருப்பதாகவும் அவரது பெயரை நீக்கி தனி பட்டா வழங்குவதற்கு ரூ.1 லஞ்சம் தர வேண்டுமென ஜெயபாலன் ரவி ஆபிரகாமிடம் கேட்டுள்ளார்.
மேலும் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், பட்டா வழங்கிய பிறகு மீதி தொகையையும் கொடுக்க வேண்டும் என்றார். இந்த தொகையை அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரத்தில் உள்ள தனது வீட்டில் கொண்டு வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து ரவி ஆபிரகாம் நெல்லை மாவட்ட லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார். ஜெயபாலன் சொன்படி செய்யுமாறு கூறிவிட்டு போலீசார் அப்பகுதியில் மறைந்திருந்தனர்.
அதன்படி ரவி ஆபிரகாம் ஜெயபாலனிடம் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த போலீசார் அவரை கையும்களவுமாக பிடித்தனர்.
ஜெயபாலன் நெல்லை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications