வரிச் சலுகைகள் தொடர வேண்டும்-நிபுணர்கள்

சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக தொழில்துறையை சரிவிலிருந்து காக்க மத்திய அரசு பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்தது. இதனால் அரசின் வருமானம் பெருமளவு குறைந்தது.
மேலும் பொருளாதார தேக்க நிலையைச் சமாளிப்பதற்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறுத்திவிட்டு ரூ. 1.86 லட்சம் கோடி சலுகையை மத்திய அரசு அளித்தது. இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் 2010-11ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 26ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில், வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்புத் தெரிவித்தள்ளனர்.
பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களது கருத்துகள், ஆலோசனைகளைக் கேட்டு வருகிறார்.
நேற்று பொருளாதார நிபுணர்களுடன் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய நிபுணர்கள் முழு பொருளாதார மீட்சி ஏற்படும் வரை வரிச் சலுகைகள் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தற்போதைய சூழ்நிலையில் வரிச் சலுகைகளை மத்திய அரசு திரும்பப் பெறக் கூடாது. பொருளாதாரம் மீட்சியடையும் வரை வரிச் சலுகைகள் தொடர வேண்டும்.
பொருளாதார தேக்க நிலை பாதிப்பிலிருந்து தொழில்துறை முற்றிலுமாக மீட்சியடையாத நிலையில் வரிச் சலுகைகளை அவசர கதியில் மத்திய அரசு திரும்பப் பெறக்கூடாது என்று நிபுணர்கள் முகர்ஜியிடம் வலியுறுத்தினர்.
அதேசமயம் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications