பட்டுக் குகை முருகன் கோவிலுக்கு மிரட்டல்-மலேசியர் கைது
கோலாலம்பூர்: உலகப் புகழ் பெற்ற பட்டுக் குகை முருகன் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக ஃபேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்த மலேசியரை அந்த நாட்டு போலீஸார் கைது செய்தனர்.
அந்த நபரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. 25 வயதான அவர், ஃபேஸ்புக் மூலம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில், தனக்குப் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் பட்டுக் குகை முருகன் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று மிரட்டியிருந்தார்.
இதுகுறித்து போலீஸில் மலேசிய இந்திய காங்கிரஸ் புகார் கொடுத்தது. அதன் பேரில் போலீஸார் செயல்பட்டு அந்த நபரைக் கைது செய்தனர். அவர் ஒரு மாணவர். கோலாலம்பூரில் உள்ள சில சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்த நாட்டு வெடிகுண்டுகளைத் தயார் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக மலேசிய கோர்ட் பிறப்பித்த தீர்ப்பைக் கண்டித்து மலேசியாவில் சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இந்த மாணவர் முருகன் கோவிலுக்கு மிரட்டல் விடுத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இவர் தீவிரவாதி அல்ல என்றும், தனது படிப்புக் கட்டணத்தை யாராவது செலுத்தினால் இவ்வாறு செய்யத் தான் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications