நொடிப்பொழுதில் காலியாகிப் போன தட்கல் டிக்கெட்டுகள்

பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூரில் வசிக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்தனர்.
விடுமுறை முடிந்து ரயில் மற்றும் பஸ்களில் வெளியூருக்கு நேற்று முதல் சென்ற வண்ணம் உள்ளனர். ஜன 18ம் தேதி திங்கள் கிழமை தான் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் திறக்கின்றன. இதனால் நாளை ஞாயிற்றுகிழமை சென்னை செல்லும் பயணத்திற்குரிய ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் வழக்கமாக செல்லும் ரயில், பஸ்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே காலியாகி விட்டன.
இந்நிலையில் நாளை செல்லும் ரயில்களுக்குரிய தட்கல் டிககெட்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. இந்த டிக்கெட்டுகளை பெற மக்கள் நேற்று முன்தினம் இரவு முதலே ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். இதனால் ரயில் நிலைய முன்பதிவு நிலைய கவுண்டரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விடிய விடிய காத்திருந்து கவுண்டர் திறந்ததும் டிக்கெட் எடுக்க ஆர்வத்துடன் இருந்தவர்களில் சிலருக்கு மட்டும்தான் முன்பதிவு கிடைத்தது. மீதமுள்ளவர்களுக்கு காத்திருப்பு பட்டியலில்தான் டிக்கெட் கிடைத்தது.
தட்கல் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று காலியாகி விட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் சிறப்பு பஸ்களை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவை, பெங்களூர் செல்லும் ரயில்களுக்குரிய முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள மவுசு காரணமாக புரோக்கர்கள் காட்டில் பண மழை கொட்டுகிறது.
எனவே ரயில்வே நிர்வாகம் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க முன்வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications