மாபெரும் மார்க்சிஸ்ட் தலைவராக விளங்கியவர் ஜோதிபாசு

Subscribe to Oneindia Tamil

Jyoti Basu
கொல்கத்தா: இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர்.

லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்தவர் ஜோதிபாசு. அன்று முதல் மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை அசைக்க முடியாத தலைவராக, இரும்பு மனிதராக கோலோச்சியவர் பாசு.

இந்தியாவின் வலிமை வாய்ந்த, கவர்ச்சிகரமான ஒரு அரசியல் தலைவராக திகழ்ந்த பெருமைக்குரியவர் ஜோதிபாசு. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் இந்திய அரசியல் அரங்கை வியாபித்திருந்த மாபெரும் தலைவர் ஜோதிபாசு.

அரசியல் கரைகளையும் தாண்டி அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட்டவர் ஜோதிபாசு என்பது அவருக்கு மிகப் பெரிய பெருமையாகும்.

மேற்கு வங்கத்தின் முதல்வராக முதல் முறையாக 1977ம் ஆண்டு பதவியேற்ற ஜோதிபாசு, 23 ஆண்டுகள் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்து பெரும் சாதனை படைத்தவர்.

தூய்மையான கம்யூனிஸவாதியாக இருந்தாலும் கூட மக்களுக்கேற்ற படி திட்டங்களை அமைப்பதிலும், தொழில் வளர்ச்சிக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும் வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கத் தயங்காதவர்.

முதல்வர் பதவியில் இருந்தபோது, தனது பதவிக்காலத்தின் கடைசிக் கட்டங்களில் மேற்கு வங்கத்தை நோக்கி பல வெளிநாட்டு நிறுவனங்களை கொண்டு வந்தார்.

1996ம் ஆண்டு மத்தியில் இவரைத் தேடி பிரதமர் பதவி வந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையாலும், கட்சியின் பிடிவாதத்தாலும் அந்தப் பதவியை ஏற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜோதிபாசு.

ஜோதிபாசு பிரதமராகப் பதவியேற்றிருந்தால் இந்தியாவின் நிலை வெகுவாக மாறியிருக்கும். பிரதமர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக மாறியிருந்திருப்பார் ஜோதிபாசு என்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது.

ஜோதிபாசுவின் மரணம் சிபிஎம் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், மேற்கு வங்க மாநிலத்திற்கும், இந்திய அரசியலுக்கும் இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

வாழ்க்கை வரலாறு...

1914ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி ஜோதி கிரண் பாசுவாக கல்கத்தாவின் நடுத்தர வர்க்க பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் ஜோதிபாசு. அவருடைய தந்தை நிஷிகாந்த் பாசு. இவர் ஒரு டாக்டர். இவரது சொந்த ஊர் கிழக்கு வங்காளத்தில் (இப்போதைய வங்கதேசம்) உள்ள பர்தி கிராமமாகும். பாசுவின் தாயார் ஹேமலதா பாசு.

1920ம் ஆண்டு கொல்கத்தாவின் தர்மதாலா என்ற பகுதியில் இருந்த லோரிட்டோ பள்ளியில் பள்ளிப் படிப்பை தொடங்கினார் பாசு. பள்ளியில் பாசு சேர்க்கப்பட்டபோது அவரது பெயரை ஜோதிபாசு என்று சுருக்கி சேர்த்தார் பாசுவின் தந்தை.

கொல்கத்தா இந்துக் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை முடித்தார் பாசு.

1935ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பின்னர் சட்டம் லண்டன் சென்றார். அப்போது இங்கிலாந்தில் கம்யூனிசம் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள், இயக்கங்கள் குறித்தும் அறிய வந்தது பாசுவுக்கு. கம்யூனிசக் கொள்கை அவரை வெகுவாக ஈர்த்தது.

பிரபல கம்யூனிஸ சித்தாந்தியும், எழுத்தாளருமான ரஜினி பால்மே தத்தின் எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்டார் பாசு.

1940ம் ஆண்டு தனது படிப்பை முடித்து பாரிஸ்டர் ஆனார் ஜோதிபாசு. படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பினார். 1944ம் ஆண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவரை ரயில்வே தொழிலாளர்களுக்கான போராட்டங்களில் கட்சி ஈடுபடுத்தியது.

பிஎன் ரயில்வே தொழிலாளர் யூனியனும், பிடி ரயில் பாதை தொழிலாளர் யூனியனும் ஒன்றாக இணைக்கப்பட்டபோது அதன் பொதுச் செயலாளரானார் ஜோதிபாசு.

லண்டனில் சட்டம் பயின்று கொண்டிருந்தபோதே அரசியல் ஆர்வமும் அவருக்குள் அதிகரித்து விட்டது. காரணம், இந்தியாவில் அப்போது நடந்து வந்த சுதந்திரப் போராட்டம். லண்டனில் இருந்தபடி செயல்பட்டு வந்த இந்தியா லீக் மற்றும் லண்டன் மஜ்லிஸ் ஆகியவற்றில் இணைந்து அவர் செயல்பட்டார். வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களின் அமைப்புகள் இவை.

ஜவஹர்லால் நேரு 1938ம் ஆண்டு லண்டன் வந்தபோது அவரை வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு பாசுவிடம் வழங்கப்பட்டது. அதேபோல சுபாஷ் சந்திரபோஸ் இங்கிலாந்து வந்தபோதும் பாசுவிடம் வரவேற்பு ஏற்பாட்டுக்கான பொறுப்பு வந்து சேர்ந்தது.

லண்டன் மஜ்ஸில் உறுப்பினராக, லண்டனுக்கு வந்த இந்திய அரசியல் தலைவர்களை, தொழிலாளர் கட்சித் தலைவர்களுடன் அறிமுகப்படுத்தி வைத்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார்.

இங்கிலாந்தில் பாசுவுக்குக் கிடைத்த நண்பரும், கம்யூனிஸ்ட் தலைவருமான பூபேஷ் குப்தா மூலம் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் பரிச்சயமும், அறிமுகமும் ஏற்பட்டது பாசுவுக்கு.

அக்கட்சியில் சேர ஆர்வம் காட்டினார் பாசு. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்திருப்பதால் இப்போது சேர வேண்டாம் என இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஹாரி போலிட் பாசுவை அறிவுறுத்தினார். அப்படி சேர்ந்தால் அவர் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம் என்பது ஹாரியின் கவலை.

இதனால் கட்சியில் சேராமலேயே படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பினார் பாசு. நாடு திரும்பியதும் தனது எதிர்காலத் திட்டத்தை பெற்றோரிடம் விவரித்தார். அரசியலில் தீவிரமாக இறங்கப் போவதாக அவர் கூறினார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தியாவில் வெள்ளைக்கார அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் பாசு. பின்னர் அவர் கட்சியிலும் இணைந்தார்.

1946ம் ஆண்டு வங்காள சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பாசு. ரயில்வே தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். மேற்கு வங்க மாநில முதல்வராக பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) இருந்தபோது, நீண்ட காலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார் பாசு.

எம்.எல்.ஏவாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பாசு செயல்பட்ட விதம், அவரது பேச்சுத் திறமை ஆகியவற்றால் கவரப்பட்டார் டாக்டர் பி.சி.ராய். தனது கட்சியின் கொள்கைக்கும், பாசுவின் கட்சிக்கும் இடையே பெரும் வித்தியாசங்கள் இருந்தபோதும் இளம் தலைவரான பாசு மீது அதிக பாசமும், மதிப்பும் வந்தது ராய்க்கு.

மாநில அரசுக்கு எதிராக அப்போது அடுக்கடுக்காக நடந்து வந்த போராட்டங்களை தலைமையேற்று நடத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்தி வந்தார் ஜோதிபாசு.

ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமே பெரும் ஆதரவுடன் திகழ்ந்து வந்த பாசுவுக்கு இந்தப் போராட்டங்களால், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும் பேராதரவு பெருகியது.

அந்த சமயத்தில், ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார் ஜோதிபாசு. இந்தப் போராட்டம் மேற்கு வங்க வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான போராட்டமாக கருதப்படுகிறது.

தனது தொடர் போராட்டங்களால் மேற்கு வங்க அரசின் தூக்கத்தை கெடுத்தார் ஜோதிபாசு. இன்று என்ன போராட்டமோ என்று அரசு பயந்து நடுங்கும் அளவுக்கு வீறு கொண்ட தலைவராக விளங்கினார் பாசு.

1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. அதன் முதல் பொலிட்பீரோவில் ஒன்பது பேர் இடம் பெற்றனர். அவர்களில் பாசுவும் ஒருவர்.

1967 மற்றும் 69 ஆகிய ஆண்டுகளில் துணை முதல்வராக பொறுப்பு வகித்தார் பாசு.

1972ம் ஆண்டு காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. சித்தார்த்த சங்கர் ரே முதல்வரானார். அவரிடம் போட்டியிட்டு பாராநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார் பாசு. ஆனால் வரலாறு காணாத மோசடியால் தான் தோற்கடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார் பாசு.

இதையடுத்து சட்டசபையை புறக்கணிப்பதாக சிபிஎம் அறிவித்தது. அதன்படி 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரை சட்டசபையை அக்கட்சி புறக்கணித்தது.

1977ல் நடந்த தேர்தலில் சிபிஎம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜூன் 21ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார் பாசு. அன்று முதல் 2000மாவது ஆண்டு நவம்பர் 6ம் தேதி வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடித்தார் பாசு. இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள், நீண்ட காலம் முதல்வர் பதவியை வகித்த ஒரே முதல்வர் பாசுதான்.

1996ம் ஆண்டு இவரைத் தேடி பிரதமர் பதவி வந்தது. ஐக்கிய முன்னணி அரசின் தலைவராக, பிரதமர் பதவியை ஏற்குமாறு கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் சிபிஎம். பொலி்ட்பீரோ அதை நிராகரித்தது. அரசிசயல் பங்கு பெறுவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதால் ஜோதிபாசுவை பிரதமர் பதவியில் அமர்த்த முடியாது என்று அது கூறி விட்டது. இதனால் தேவெ கெளடா பிரதமர் பதவியில் அமர்ந்தார்.

2000மாவது ஆண்டு உடல் நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஜோதிபாசு. அவரது வாரிசான புத்ததேவ் பட்டச்சார்யா முதல்வரானார்.

2005ம் ஆண்டு டெல்லியில் நடந்த சிபிஎம்மின் 18வது காங்கிரஸ் கூட்டத்தில் பொலிட்பீரோ உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜோதிபாசு.

2006ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தனக்கு ஓய்வு தருமாறு சிபிஎம்முக்குக் கோரிக்கை வைத்தார் பாசு. ஆனால் கட்சி அதை நிராகரித்து விட்டது. 2008ம் ஆண்டு நடைபெறும் காங்கிரஸ் கூட்டம் வரை பாசு கட்சிக்குத் தேவை என்று பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறி விட்டார்.

அதன்படி 2008ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த சிபிஎம் காங்கிரஸில் பாசுவின் பெயர் பொலிட்பீரோ உறுப்பினர் பொறுப்பில் சேர்க்கப்படவில்லை.

மாபெரும் கம்யூனிசத் தலைவராக, அசைக்க முடியாத இரும்பு மனிதராக விளங்கியவர் ஜோதி பாசு. அவர் செயல் திறனுடன் இருந்தவரை மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மிகப் பெரிய பலத்துடன் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+