பஹ்ரைனில் தமிழக இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை
ஷகுரா (பஹ்ரைன்): பஹ்ரைனின் ஷகுரா என்ற இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் ரவி என்ற 22 வயது இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஷகுராவில் உள்ள தொழிலாளர் முகாமில் உள்ள தனது அறையில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் சுரேஷ் ரவி. தனது அறையைப் பூட்டி அவர் கட்டையை வைத்து முட்டுக் கொடுத்து யாரும் திறந்து விடாதபடி செய்து விட்டு பின்னர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
முகாம் காவாலளி, சுரேஷ் அறையிலிருந்து புகை மூட்டமாக வருவதைப் பார்த்து போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் வருவதற்குள் அறைக் கதவை உடைக்க முயன்றார் காவலாளி. ஆனால் உள்ளுக்குள் மரக் கட்டையை வைத்து சுரேஷ் முட்டுக் கொடுத்திருந்ததால் கதவை உடைக்க முடியவில்லை.
ஜூமா கட்டுமான நிறுவனத்தில் கடந்த 18 மாதங்களாக வேலை பார்த்து வந்தார் சுரேஷ் ரவி. அவர் குறித்து நிறுவன பொது மேலாளர் லிபி தாமஸ் கூறுகையில், 100 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் சுரேஷ். இதனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. காவலாளி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இதனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை அவரால் கூற முடியவில்லை.
அந்த அறையில் சுரேஷுடன் மேலும் ஐந்து பேர் தங்கியிருந்தனர். சம்பவம் நடந்தபோது அவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றிருந்தனர். சுரேஷின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவர் தனது நண்பர்களிடம் பெருமளவில் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து நண்பர்கள், சுரேஷின் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்து இந்த முடிவுக்கு சுரேஷ் வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தற்கொலைக்கு முன்பு சுரேஷ் கடிதம் எதையும் எழுதி வைத்திருக்கவில்லை.
சுரேஷ் ரவியின் நண்பர்கள் அவரது மரணத்தால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் மீள முடியாத அதிர்ச்சியில் உள்ளனர். தங்களது செயலால் சுரேஷ் ரவி தற்கொலை வரை செல்வார் என நினைக்கவே இல்லை என்று அவர்கள் சோகத்துடன் கூறினர் என்றார்.
சுரேஷ் வாங்கிய கடன் தொகையை அவரது நண்பர்களிடம் திருப்பிச் செலுத்த நிறுவனமே முடிவு செய்துள்ளதாக தாமஸ் தெரிவித்தார். மேலும் நிதி திரட்டி கடன் தொகையை அடைக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் தாமஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications