பீகாரில் அல்கொய்தா தீவிரவாதி கைது
புர்னியா (பீகார்): பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் வந்த அல்கொய்தா தீவிரவாதி பீகாரில் கைது செய்யப்பட்டான்.
பிகாரில் உள்ள புர்னியா நகரில் சந்தேகத்தின் பேரில் குலாம் ரஸூல் கான் என்பவரை போலீசார் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கிடைத்தது.
தொடர்ந்து ஒருவாரமாக விசாரணை நடத்தியதில் குலாம் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன் என தெரியவந்தது.
இதுகுறித்து புர்னியா போலீஸ் எஸ்.பி என்.எச்.கான் கூறுகையில், 'அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன் எனத் தெரிந்தவுடன் பல்வேறு விசாரணை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துவிட்டோம்.
குலாம் துபாயில் டிரைவராக வேலை பார்த்தவன். 1987 முதல் ஹைதராபாத்தில் தங்கியிருந்து திருமணமும் செய்திருக்கிறான்.
மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, சகோதரியை கொலை செய்திருக்கிறான். போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்றுள்ளான்.
சிறையில் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு பரோலில் வெளிவந்த குலாம் தீவிரவாத கூட்டாளி சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு பறந்துவிட்டான்.
2004 முதல் 2005ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமாக பறந்துகொண்டு அல்கொய்தா சொன்ன வேலைகளை எல்லாம் செய்திருக்கிறான்.
பின்னர் பணத்துடன் ஹைதராபாத் வந்த அவனை ஏற்கனவே தேடிக்கொண்டிருந்ததால் போலீசார் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர் எப்படியோ சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு போய்விட்டான். கடந்த வாரம் புர்னியா வழியாக வங்கதேசத்திற்குள் செல்ல முயன்ற போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டான்.
குலாம் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்தான். இவனிடம் இருந்து மத்திய புலனாய்வு போலீசார் வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications