இந்தியக் கல்வி நிறுவனங்களை சிக்கலில் ஆழ்த்திய துபாய் நெருக்கடி
துபாய்: துபாய் பொருளாதார நெருக்கடியால், துபாயில் உள்ள இந்திய பொறியியல் மற்றும் நிர்வாகவியல் கழகங்களுக்கு அனுமதி சேர்க்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 13 முதல் 60 சதவீத அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.
இந்தியாவைச் சேர்ந்த பிர்லா அறிவியல், தொழில்நுட்பக் கழகம் (பிட்ஸ்-பிலானி), இந்திய நிர்வாக தொழில்நுட்பக் கழகம் (ஐ.எம்.டி), எஸ்.பி.ஜெயின் நிர்வாகவியல் மையம், மணிப்பால் பல்கலைக்கழகம் ஆகியவை துபாயில் கிளை விரித்து கல்வி நிலையங்களை நடத்தி வருகின்றன.
மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துபாய் பிரிவில் இந்த ஆண்டு 622 பேர்தான் சேர்ந்துள்ளனராம். கடந்த ஆண்டு இது 721 ஆக இருந்ததாம். 13 சதவீத சரிவை சந்தித்துள்ளது மணிப்பால் பல்கலைக்கழகம்.
துபாய் மணிப்பால் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ராம்ஜீ இதுகுறித்து கூறுகையில், துபாயில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் பொதுவாகவே வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இருப்பினும் எங்களுக்கு சற்று குறைவான பாதிப்பு ஏற்பட்டிருப்பது நிம்மதியைத் தருகிறது.
பொருளாதார சீர்குலைவே இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது என்றார்.
ஐஎம்டி நிறுவனத்தின மாணவர் சேர்க்கையில் கிட்டத்தட்ட 64 சதவீத அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் 250 பேர் சேர்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு 90 பேர்தான் சேர்ந்துள்ளனராம்.
இந்த நிறுவனங்கள் அனைத்துமே துபாய் சர்வதேச கல்வி நகரிய வளாகத்தில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உயர் கல்வி நிறுவனங்களுக்காக இந்த நகரியத்தை துபாய் அரசு உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வளாகத்தில் மொத்தம் 32 சர்வதேச நிறுவனங்களின் பல்கலைக்கழகஙகள், உயர் கல்வி நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்தியா தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஆகியவற்றின் கல்வி நிறுவனங்கள் உள்ளன. 12 ஆயிரம் மாணவ, மாணவியர் வரை பயின்று வருகின்றனர்.
மாணவர் வருகை குறைந்து போய் விட்டதால் ஏற்பட்டுள்ள நிலையைச் சமாளிப்பதற்காக மணிப்பால் பல்கலைக்கழகம், எஸ்.பி.ஜெயின் ஆகிய நிறுவனங்கள் கட்டண உயர்வுக்குத் தாவியுள்ளனவாம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாய் வேர்ல்ட் பெரும் கடனில் மூழ்கி உலக நாடுகளை அதிர வைத்தது நினைவிருக்கலாம். அந்த வீழ்ச்சியிலிருந்து துபாய் இன்னும் மீளவில்லை என்பதையே இந்த மாணவர் சேர்க்கை வீழ்ச்சி காட்டுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications