திண்டிவனம்-எண்கெளன்டரில் ரெளடி சுட்டுக் கொலை
திண்டிவனம்: திண்டிவனம் அருகே போலீஸ் எண்கெளன்டரில் ரெளடி சுட்டுக் கொல்லப்பட்டான்.
காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேட்டையை சேர்ந்த வசந்த் (32) என்பவர் கடந்த 13ம் தேதி 7 பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையினரால் தேடப்பட்டு வந்த அருண், வினோத், அசோக், சிலம்பு, பாலன் ஆகியோர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாகத் தெரியவந்தது.
இதையடுத்து இவர்களை சரணடையும் முன்பே கைது செய்ய தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் நீதிமன்றம் அருகே மறைந்து நின்றிருந்தனர்.
இதை அறிந்து கொண்ட கொலைக் கும்பல் நீதிமன்றத்துக்கு வராமல் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்றனர்.
இதையறிந்த தனிப்படையினர் அவர்களைப் பிடிக்க மயிலத்துக்கு விரைந்தனர். அங்கு போலீசாரைக் கண்ட கொலையாளிகள் தப்பியோடவே போலீசார் துரத்திச் சென்றனர்.
இதில் அருண், வினோத் ஆகியோர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
அசோக், சிலம்பு, பாலன் ஆகிய மூவரும் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடவே போலீசார் விடாமல் துரத்திச் சென்றனர்.
அப்போது போலீசார் மீது கொலையாளிகள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அவர்கள் வீசிய 8 வெடிகுண்டுகளில் குண்டுகள் வெடித்துச் சிதறி தனிப்படையைச் சேர்ந்த 3 போலீசார் காயமடைந்தனர்.
இதில் போலீசார் நிலைகுலையவே அந்தக் கும்பல் துப்பாக்கிகளால் போலீசாரை நோக்கி சுட்டனர்.
இதையடுத்து போலீசார் பதிலுக்கு சுட்டனர். இதில் அசோக் மீது குண்டு பாய்ந்ததில் அவன் கீழே சரிந்து விழுந்தான். மற்ற இருவரும் தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்த அசோக்கை போலீசார் மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவன் இறந்துவிட்டான்.
இதையடுத்து அசோக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
கொலையாளிகள் வெடிகுண்டு வீசியதில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் அனுமந்தன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு சரவணன் ஆகியோருக்கு மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறி்த்து அறிந்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசானமுத்து, மாவட்ட எஸ்பி அமல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
எண்கெளன்டரில் பலியான அசோக்கின் தாயார் தமிழரசி, சூனாம்பேடு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அசோக்கின் தந்தை கஜேந்திரனும், அண்ணன் அருளும் சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டனர்.
இதற்குப் பழிக்கு பழியாக தொடர் கொலைகள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே வசந்தை அசோக் கும்பல் கொலை செய்துள்ளது.
இப்போது போலீஸ் சுட்டு அசோக் பலியானதால் சூனாம்பேடு கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஒரு கொலை:
இந் நிலையி்ல சென்னை தாம்பரம் பஸ் நிலையம் அருகே தண்ணீர் பாக்கெட் விற்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
ரயில்வே பணிமனை அருகே நேற்று முன் தினம் இரவு ஒரு வாலிபரை மர்மக் கும்பல் அரிவாள்களுடன் விரட்டி சென்று பயங்கரமாக வெட்டியது. இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தியாகு (25) என்று தெரிய வந்துள்ளது. அவர் தாம்பரம் ரெங்கநாதபுரத்தில் தங்கியிருந்து பஸ் நிலையத்தில் தண்ணீர் பாக்கெட்கள் விற்று வந்தார்.
தண்ணீர் பாக்கெட் விற்பதில் ஏற்பட்ட போட்டியில் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications