புதிய சட்டசபைத் திறப்பு விழாவில் சோனியாவும் பங்கேற்பு
சென்னை: புதிய சட்டசபைக் கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் தவிர தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் வரவுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு புதிய வளாகம் மற்றும் தலைமை செயலக வளாகம் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு வசதியாக மார்ச் மாதம் 10-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டசபை வளாகம் திறப்பு விழா மார்ச் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது. கட்டடத்தை திறந்துவைக்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
அதை ஏற்று விழாவுக்கு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்து கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தார். இதேபோல சோனியாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர். அவரும் அதை ஏற்று விழாவுக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதிக்கு சோனியா அனுப்பியுள்ள கடிதத்தில்,
மார்ச் மாதம் 13-ந்தேதி நடைபெறும் புதிய சட்டமன்ற கட்டட திறப்புவிழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சியுடன் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். நான் பிரதமர் மன்மோகன்சிங்குடன் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சோனியா.












Click it and Unblock the Notifications