நிகர்நிலை பல்கலை அந்தஸ்து ரத்து-மாணவர்கள் போராட்டம்
சென்னை: நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கான அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சவீதா பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரிக்குள் வன்முறையில் இறங்கினர்.
மேசை, நாற்காலிகளை உடைத்து எறிந்த அவர்கள் தீவைத்தும் கொளுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதட்டம் காணப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் என்ற இடத்தில் சவீதா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சவீதா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் போதுமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பது போன்ற பல்வேறு புகார்களை அதில் பயிலும் மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சவீதாவும் ஒன்று என்பதே மாணவர்களின் இந்த கொந்தளிப்புக்கு காரணமாகும்.
கல்லூரியை ஒட்டி உள்ள விடுதியில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆவேசமடைந்து நேற்றிரவு ஹாஸ்டலில் இருந்த கதவு, ஜன்னல்களையும், டேபிள், சேர்களையும் உடைத்து நொறுக்கினர்.
அத்துடன் கல்லூரிக்குள் நுழைந்து அங்கு வகுப்பறை கதவு, ஜன்னல்களையும், டேபிள் சேர்களையும் அடித்து உடைத்தனர். பின்னர் சேதப்படுத்தப்பட்ட அந்த மரச் சாமான்களை கல்லூரி மைதானத்திற்குள் கொண்டுவந்து போட்டு தீவைத்து எரித்தனர்.
நேற்றிரவிலிருந்து மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதால் கல்லூரி வளாகமே போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களைப் பார்த்த மாணவர்கள், போலீசார் மீதும் கல் வீச்சில் ஈடுபட்டனர். ஆயினும் போலீசார் கல்லூரி வளாகத்திற்குள் நுழையாமல் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். ஆனால் அவர்களுடன் மாணவர்கள் பேச மறுத்துவிட்டனர்.
கல்வி பாதிக்காது - துணைவேந்தர்
இதற்கிடையே, நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்காது என்று அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
தமிழ்நாட்டில் 17 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்தாகிறது. இந்த பல்கலைகழகங்களில் சுமார் ஒரு லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் அரசு பல்கலைக்கழகங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றன.
மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்காதவாறு அருகில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்படும். சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டமும், அரசு பல்கலைகழகங்களின் பாடத்திட்டமும் வெவ்வேறாக உள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு பொதுவான பாடத்திட்டம் வழங்கப்பட வேண்டும்.
என்ஜினீயரிங் மாணவர்களில் பல்கலைக்கழகங்களிலும் கலை அறிவியல் மாணவர்களை அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்கவும் வழி காணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications