இந்தியர்கள் மீது நடப்பது இன்வெறி தாக்குதலே-ஆஸி. ராணுவ அதிகாரி

மேலும், இவை சாதாரண குற்றச் செயல்களே என்று ஆஸ்திரேலிய அரசு கூறி வருவதையும் அவர் கண்டித்துள்ளார். கடந்த 18 மாதங்களாக இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உறவு கசந்து வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கப் போகும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி பீட்டர் காஸ்கிரோவ் தி ஏஜ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இது இனவெறித் தாக்குதல் இல்லை யாராவது கூறினால் அவர்கள் சுத்தப் பைத்தியக்காரர்கள் என்றுதான் அர்த்தம்.
சமீபகாலமாக தனிப்பட்ட நபர்கள் மீது சிலர் குழுவாகவும், தனியாகவும் நடத்தி வரும் தாக்குதல்கள் இந்தியர்களை குறி வைத்து மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று கூறுவதை விட்டு விட்டு இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தப்பட
வேண்டும்.
கடந்த 2005ம் ஆண்டு ஆங்கிலேய இளைஞர்களுக்கும், லெபனான் இனத்தவருக்கும் இடையே சிட்னி கடற்கரையில் நடந்த மிகப் பெரிய இனக் கலவரத்தை நாம் மறந்து விடக் கூடாது. தற்போது நடந்து வரும் தாக்குதல்கள் அதற்குச் சமமானதே.
சிட்னி கலவரம் யாரும் எதிர்பாராதது, வழக்கத்திற்கு விரோதமானதாக இருந்தது. காரணம், ஆஸ்திரேலியா என்றால் சகிப்புத்தன்மை கொண்ட நாடு, பல இனக் குழுக்கள் இணக்கமாக வாழும் நாடு, நீக்குப் போக்குடன் செயல்படக் கூடியவர்கள் உடைய நாடு என்ற கருத்து அதுவரை இருந்து வந்தது. அந்தக் கருத்து 2005ம் ஆண்டில் உடைந்து போனது.
தற்போது இந்தியர்களுக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல்களின் பின்னணியில் குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் இறுக்கலாம். ஆனால், அவர்கள் இனவெறியுடன் தாக்கி வருவதாகவே நான் கருதுகிறேன்.
குற்றச் செயல்களின் போர்வையில் இன துவேஷம் மறைந்திருப்பதை நாம் புறக்கணித்து விடக் கூடாது. அது தொடரவும் அனுமதிக்கக் கூடாது. இதனால் இந்த நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து போய் விடும் என்று எச்சரித்தார் காஸ்கிரோவ்.












Click it and Unblock the Notifications