எங்களுக்கு வேலையே இல்லை-இணையமைச்சர்கள் புகார்

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இணை, துணை அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். 38 துறைகளைச் சேர்ந்த இந்த இணையமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆராய இக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், 33 இணையமைச்சர்கள் மட்டுமே பங்கேற்ற இக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இணையமைச்சர்களில் பெரும்பாலானோர் தங்கள் மனக்குமுறலை பிரதமரிடம் கொட்டித் தீர்த்துவிட்டனர்.
தங்கள் இலாகா கேபினட் அமைச்சர்கள் மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர். தங்களுக்கு அவர்கள் போதுமான பணிகளை ஒதுக்குவதில்லை என்றும், தங்களுக்கு தனிப் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள்
தெரிவித்தனர்.
இதனால் நாங்கள் அலுவலகங்களுக்குச் போவதையே குறைத்துக் கொண்டுவிட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு அமைச்சர் பிரதமரிடம், உண்மையைச் சொன்னால் எங்கள் அமைச்சகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது கூட எங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
திமுக பரம திருப்தி:
ஆனால், திமுகவைச் சேர்ந்த நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தனக்கு போதிய பணிகள்
ஒதுக்கீடுகள் செயயப்பட்டுள்ளதாகவும், தனது கேபினட் அமைச்சர் பிரணாப் முகர்ஜி தனக்கு போதிய முக்கியத்துவம் தருவதாகவும் கூறினார்.
அதே போல திமுகவைச் சேர்ந்த இணையமைச்சர்கள் அனைவருமே தங்களுக்கு போதிய பணிகளும் முக்கியத்துவமும் தரப்படுவதாகக் கூறியுள்ளனர்.
அதேபோல் உள்துறை இணையமைச்சராக உள்ள காங்கிரஸைச் சேர்ந்த அஜய் மக்கான், தனது கேபினட் அமைச்சர் ப.சிதம்பரம் மீது முழு திருப்தி தெரிவித்தார்.
இந்த ஆலோசனையையடுத்து இணையமைச்சர்களின் பிரச்சனைகள் குறித்து கேபினட் அமைச்சர்களுடன்
பேசுவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications