முல்லைப் பெரியாறு-அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை தொடக்கம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று தனது விசாரணையைத் தொடங்கியது.
ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்த பெஞ்ச் தனது விசாரணையைத் தொடங்கியபோது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன் முதலில் வாதத்தைத் தொடங்கினார்.
அப்போது பராசரன் கூறுகையில், உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில், கேரள அரசு அவசரம் அவசரமாக சட்டம் ஒன்றை இயற்றியது.
இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலும் ஆகும். இதன் மூலம் சட்டமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் இடையே மோதலை உண்டாக்க முயன்றுள்ளது கேரள அரசு.
இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பு புதிய சட்ட திருத்தம் மூலமாகவோ அல்லது பாராளுமன்றத்தின் மூலமாகவோ தீர்வு காண முடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கடந்த 2006-ம் ஆண்டு அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்த முன்வராமல் நீதிமன்ற தீர்ப்பை எதிராக 16 நாட்களுக்குள் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்த நடவடிக்கை இந்திய அரசியல் சாசனப்படி செல்லுபடியாகாது.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு நீரை தேக்கி வைக்கும் நிரந்தர தீர்ப்பை கட்டளையாக பிறப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு ஏற்கனவே, முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்குவதால் அணை பாதுகாப்புடன் இருக்கும் என மத்திய நீர்வளத்துறை மற்றும் நிபுணர்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இதை கேரள அரசு நிறைவேற்றாமல் சட்டதிருத்தம் கொண்டு வந்தது. இதற்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது.
உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் 142 அடி வரை நீரை தேக்கவும், அணையை பராமரிக்க தமிழ்நாட்டுக்கு அனுமதி வழங்கி அளித்த தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. 142 அடி அளவுக்கு தண்ணீரை தேக்கினால், அணை பாதுகாப்புடன் உள்ளதா என்பதுதான் அடிப்படை கேள்வி. அவ்வாறு நீரை தேக்கும்போது அணைக்கும், அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
கடந்த 1979-ம் ஆண்டு முல்லை பெரியாறு அணைக்கு அதிகபட்சமாக நீர்வரத்து வந்த நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள மாநில அரசு மதித்து நடைமுறைப்படுத்த நிரந்தர உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்றார் பராசரன்.
இன்றும் இந்த வழக்கில் விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சுதர்ஷன் ரெட்டி, முகுந்தம் சர்மா, ஆர்.எம்.லோதா, தீபக் வெர்மா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications