இலவச டிவி பார்சலில் ரூ.50 லட்சம் எரிசாராயம்!
கயத்தாறு: நெல்லை அருகே உள்ள கயத்தாறில் நூதன முறையில் இலவச டிவி பெட்டி அட்டைகளில் அடைத்து கடத்திய ரூ.50 லட்சம் எரிசாராயம் பிடிபட்டது.
நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்க் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நெல்லை மாவட்ட எல்லையில் வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது ஒரு லாரியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி பார்சல்கள் ஏராளமாக அடுக்கி கொண்டு செல்லப்பட்டது. அந்த பெட்டிகளில் சிலவற்றில் சீல்கள் கிழி்க்கப்பட்டு இருந்ததால் போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது லாரி டிரைவரிடம் டிவிக்கள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற முறையான ஆவணம் எதுவும் இல்லை.
சந்தேகம் அடைந்த போலீசார் ஒரு டிவி பெட்டி பார்சலை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதில் இலவச டிவி இல்லை. ஆனால் அதற்கு பதில் 2 கேன்களில் எரிசாராயம் இருந்தது.
உடனடியாக மற்ற பெட்டிகளை திறந்து பார்த்தனர். அனைத்து இலவச டிவி அட்டைகளிலும் சுமார் 50 லிட்டர் பிடிக்க கூடிய 2 பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நூதன கடத்தல் குறித்து அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவரிடம் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடையில் ஒரு தோட்டத்தில் குடோனில் இருந்து இதை ஏற்றி வந்ததாக கூறினார். இதற்கு காயத்தாரை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் உதவியதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக நெல்லை மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கார்க், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய 10 அதிரடி படைகள் கயத்தாறுக்கு சென்றது.
அவர்கள் ஓரே நேரத்தில் கயத்தாறில் உள்ள சில வீடுகள் மற்றும் தெற்கு மயிலோடையில் உள்ள சில தோட்டத்துக்கு குடோன்கள் உள்பட 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் தெற்கு மயிலோடையில் உள்ள குடோனில் லாரியில் இருந்தது போல ஏராளமான இலவச டிவி அட்டை பெட்டிகளில் எரிசாராய கேன்களை அடுக்கி வைத்திருந்தனர். அதற்கு காவலாக இருந்தவர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் காட்டுக்குள் தப்பியோடி தலைமறைவானார்கள்.
இவர்கள் இதுபோல பலமுறை நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு கடத்தியது தெரிய வந்தது. இந்த கடத்தல் பின்னனியில் யார், யார் உள்ளனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications